Published : 24 May 2025 06:24 AM
Last Updated : 24 May 2025 06:24 AM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படங்கள் விரைவில் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனக் கூறினார். இதற்கான முடிவுகடந்த மே 21-ல் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பொது நோக்கக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த மூன்று படங்களில் இடம்பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்திற்கு வீர சாவர்க்கரும், சமூக சீர்திருத்தத்திற்கு தயானந்த் சரஸ்வதி மற்றும் கல்வியின் பங்களிப்பை பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் நிறுவனரான மதன் மோகன் மாளவியா என்ற பங்களிப்புகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்கு தேசபக்தி, சேவை மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஊக்குவிக்கும் என சபாநாயக்ர் விஜயேந்திர குப்தா தெரிவித்துள்ளார். இதற்கு டெல்லி சட்டப்பேரவையின் முக்கிய எதிர்கட்சியான ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம் எல் ஏக்களில் ஒருவரான குல்தீப் குமார் கூறும்போது, ‘‘நாம் பரிந்துரைத்த மாதா சாவித்ரிபாய் பூலேவின் படம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு முன்பே பாஜகவினர் சட்டப்பேரவையில் இருந்த பாபா சாகேப் அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டனர். இது, அவர்கள் எப்போதும் சிறந்த ஆளுமைகளை அவமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது’’ எனக் கூறினார்.
முன்னாள் டெல்லி முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி தனது 'எக்ஸ்' பதிவில், ’பாஜக பெண்களுக்கு எதிரானது, கல்விக்கு எதிரானது மற்றும் தலித்துகளுக்கு எதிரானது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் முன்மொழிவை பாஜக வேண்டுமென்றே நிராகரித்தது’ எனத் தெரிவித்தார்.
இதற்கு பாஜக எம் எல் ஏக்கள் தரப்பினர் கூறும்போது, ‘ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் எந்த எழுத்துப்பூர்வ முன்மொழிவையும் கொடுக்கவில்லை. இந்தக் கோரிக்கையை கூட்டத்தில் வாய்மொழியாக மட்டுமே எழுப்பினர். இப்போது எங்கள் மீது தவறானக் குற்றம் சுமத்துகின்றனர்’ எனக் குற்றம் சாட்டினர்.
இந்து மகாசபாவின் ஒரு முக்கிய தலைவராக இருந்தவர், வீர சாவர்க்கர். இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல அரசியல் செயல்களில் ஈடுபட்டார். ஆங்கிலேயர்களால் அந்தமான் சிறையிலும் பல வருடங்கள் அடைக்கபட்டிருந்தார். தனது கொள்கைகள் மற்றும் செயல்களுக்காக அவர் பலரால் பாராட்டப்பட்டாலும், வீர சாவர்கரை விமர்சிப்பவர்களும் அதிகம். குறிப்பாக, அவரது இந்துத்துவக் கொள்கைகளால் அவர் அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறார். இதுபோன்ற காரணங்களால் வீர் சாவர்கர் ஒரு சர்ச்சைக்குரியத் தலைவராகவே கருதப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT