Published : 23 May 2025 06:32 PM
Last Updated : 23 May 2025 06:32 PM
புதுடெல்லி: ராஜஸ்தானின் கோட்டா நகரில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து அம்மாநில அரசை கடுமையாக சாடியிருக்கும் உச்ச நீதிமன்றம், நிலைமை மிகவும் தீவிரமானது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், "அரசாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தக் குழந்தைகள் கோட்டாவில் மட்டும் ஏன் இறக்கிறார்கள்? ஓர் அரசாக இதுபற்றி நீங்கள் யோசிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், "தற்கொலை வழக்குகளை ஆராய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மே 4-ம் தேதி கரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்து வந்த 22 வயது மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கேட்டது. அதேபோல், கோட்டாவில் பெற்றோருடன் வசித்து வந்த, நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தனது அறையில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கையும் விசாரித்தது.
கரக்பூர் ஐஐடி மாணவர் தற்கொலையில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிமன்றம் கூறுகையில், "இவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை மிகவும் தீவிரமான பிரச்சினை. வழக்குப் பதிவு செய்ய நீங்கள் ஏன் நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டீர்கள்?" என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார். அதற்கு, “நீங்கள் சட்டப்படி விசாரணையை தொடருங்கள்” என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது
கோட்டா மாணவி தற்கொலை விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து அதிருப்தியை தெரிவித்த உச்ச நீதிமன்றம், கோட்டாவில் எத்தனை மாணவர்கள் இறந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ‘14’ என்று பதில் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, "இந்த மாணவர்கள் ஏன் இறக்கிறார்கள்? நீங்கள் எங்களின் தீர்ப்புகளை அவமதித்துள்ளீர்கள். ஏன் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை? வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வது சம்மந்தப்பட்ட காவல் துறையின் கடமை. சம்மந்தப்பட்ட பிராந்தியத்தின் காவல் துறை பொறுப்பு அதிகாரி தனது கடமையில் இருந்து தவறிவிட்டார். இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அவர் கடைபிடிக்கவில்லை" என்று நீதிபதிகள் தெரித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 14-ம் தேதி கோட்டா வழக்கில் தொடர்புடைய காவல் துறை அதிகாரி தற்போதைய நிலைமையை விளக்க வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயிற்சி மையங்களின் ஹப் கோட்டா: ராஜஸ்தானில் உள்ள கோட்டா பகுதி நுழைவுத் தேர்வுகளுக்கான, குறிப்பாக ஐஐடி - ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் ‘ஹப்’ ஆக கருதப்படுகிறது. இங்குள்ள நூற்றுக்கணக்கான பயிற்சி மையங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கும், ஐஐடிகள், என்ஐடிகள், எய்ம்ஸ்களுக்கு தேர்வாகிச் செல்கின்றனர். இதனால் பிஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கள் பொறியியல், மருத்துவக் கனவுகளை துரத்திப் பிடிக்க கோட்டாவின் மையங்களில் பயிற்சி பெற வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களில் படிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சம் மாணவர்கள் கோட்டாவில் உள்ள சுமார் 3,500 விடுதிகளிலும், ஆயிரக்கணக்கான வீடுகளிலும் தங்கிப் படிக்கின்றனர். இந்தப் பின்னணியில் கடந்த சில ஆண்டுகளாக நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பல்வேறு அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது கோட்டா மீதான எதிர்மறை பார்வையை உருவாக்கியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவில் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2023-ல் 27 பேர்கள், 2024-ல் 16 பேர்கள், 2025 இதுவரை 14 பேர் என அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு குட்டு வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT