Published : 23 May 2025 03:44 PM
Last Updated : 23 May 2025 03:44 PM
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான முடிவு, நமது உளவுத்துறை வழங்கிய துல்லியமான தகவல்கள், நமது ஆயுதப்படைகளின் அற்புதமான தாக்குதல் ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.
நமது நாடு பல பத்தாண்டுகளாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பல பெரிய சம்பவங்களை நடத்தியது, ஆனால் அதற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை. 2014-ல், நரேந்திர மோடி பிரதமரானார், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
அதன் பிறகு முதல் பெரிய தாக்குதல் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் நமது வீரர்கள் மீது நடத்தப்பட்டது. உரி தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக முதல் முறையாக சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தி பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் பணியை நாம் செய்தோம்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம், நாம் பயங்கரவாதிகளைத் தாக்கினோம். பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை தன் மீதான தாக்குதலாக பாகிஸ்தான் கருதியது. பாகிஸ்தான் ராணுவம் நமது பொதுமக்களையும், நமது ராணுவ நிலைகளையும் தாக்க முயன்றபோது, இந்திய ராணுவம் வலுவான பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் விமானத் தளங்களைத் தாக்கியதன் மூலம் நமது ராணுவம் தனது வலிமையை வெளிப்படுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்தபோது பாகிஸ்தான் அம்பலப்படுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நாம் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தியதன் மூலமும், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டதன் மூலமும் அது அம்பலமானது.
நமது ஆயுதப்படைகள் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினரை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. ஆபரேஷன் சிந்தூர் பதட்டங்களின் போது, எல்லை பாதுகாப்புப் படை எல்லையை விட்டு வெளியேறவில்லை. அந்தப் பக்கத்திலிருந்து தாக்குதல்கள் நடந்தபோது, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களுக்கு எதிராக பதிலடி கொடுத்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது உள்நாட்டு பாதுகாப்பு ஆயுதங்களின் வெற்றியை நாங்கள் கண்டோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு ஆயுதங்கள் துல்லியமாக தாக்கின. நரேந்திர மோடியின் தலைமையில், நாம் முன்னோக்கி நகர்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT