Published : 22 May 2025 06:51 AM
Last Updated : 22 May 2025 06:51 AM
புதுடெல்லி: சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க, தேர்வு செய்யப்பட்ட 33 நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுடன் சம்பந்தப்பட்ட நாடுகள் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் பாக். தீவிரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தள எம்.பி சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, சிவ சேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இந்த குழுவினர் வெளிநாட்டு பிரதமர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகியோரை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிப்பர்.
இந்திய எம்.பி.க்கள் செல்ல வேண்டிய 33 நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்தது. இந்த நாடுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன என்பது குறித்து வெளிநாடு செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார்.
இது குறித்து சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக எம்.பி. அபரஜிதா சாரங்கி கூறுகையில், ‘‘ மத்திய அரசு தேர்வு செய்ய 33 நாடுகளில் 15 நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாறும். இதர 5 நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இனிமேல் உறுப்பினராக ஆக உள்ளன. சில நாடுகளின் கருத்துக்கள் ஐ.நா சபையில் வழக்கமாக கேட்கப்படும். அந்த நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன’’ என்றார்.
ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு இந்தோனேஷியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டு சென்றது. இந்த குழுவில் பாஜக எம்.பி.க்கள் சாரங்கி, பிரிஜ் லால், பிரசன் பராஜ், ஹேமங் ஜோஷி, மார்க்சிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ், திரிணமூல் காங்கிஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உள்ளனர். இவர்கள் முதல் நாடாக ஜப்பான் சென்று தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவர். அடுத்ததாக சிவ சேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு வெளிநாடு செல்கிறது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தற்போது சுழற்ச்சி முறையில் மாறும் நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ளது. அடுத்த 17 மாதங்களுக்கு பாகிஸ்தான் உறுப்பினராக இருக்கும். அதனால் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிக்க பாகிஸ்தான் நிச்சயம் முயற்சிக்கும். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம், சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா தற்போது தெரிவித்தால், அந்த நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உலக அரங்கில் பாகிஸ்தான் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படும் நிலை உருவாகும். அதற்காக இந்திய எம்.பி.க்கள் குழுவை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்புடைய 33 நாடுகளுக்கு அனுப்பி சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT