Published : 21 May 2025 11:07 AM
Last Updated : 21 May 2025 11:07 AM
புதுடெல்லி: “அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.” என்று ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அவரது 34-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமியில் இருக்கும் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தனது தந்தை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது இலக்கு. நிச்சயம் நிறைவேற்றுவேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியாவின் சிறந்த மகனான ராஜீவ் காந்தி நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்தவர். அவரது தொலைநோக்குப் பார்வை, துணிச்சலான தலையீடுகள் இந்தியாவை 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்தியது. வாக்களிப்போர் வயதை 18 ஆக குறைத்தது, பஞ்சாயத்து ராஜ்களை வலுப்படுத்தியது, தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு வித்திட்டது, உள்ளடக்கிய கற்றலை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை வகுத்தது ஆகியன அவற்றில் அடங்கும். அவரது நவீன சிந்தனையாற்றலால் உந்தப்பட முடிவுகள் இந்தியாவை புதிய உயரத்துக்கு இட்டுச் சென்றது. அவரது பங்களிப்பு என்றும் நமக்கு ஊக்கமளிக்கும். அவரது நினைவு என்றும் நம் உள்ளங்களில் இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT