Published : 21 May 2025 07:28 AM
Last Updated : 21 May 2025 07:28 AM
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்ததாக மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது. இந்த தாக்குதலில் இந்திய விமானப் படை எத்தனை போர் விமானங்களை இழந்தது’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப் படை எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று ராகுல் காந்தி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்.
பாகிஸ்தான் விமானப் படை எத்தனை போர் விமானங்களை இழந்தது? எத்தனை பாகிஸ்தான் விமான படைத் தளங்கள் அழிக்கப்பட்டன என்று அவர் கேள்வி எழுப்பவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ராகுல் காந்திக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘‘நிஷான் -இ- பாகிஸ்தான்’’ வழங்கப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய கால மிர் ஜாபர் ராகுல்: இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால் பதித்த காலத்தில் ஆட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டது. இதன்படி கடந்த 1757-ம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனிக்கும் வங்கதேச நவாப் சிராச் உத் தவ்லாவுக்கும் இடையே பிளாசி போர் நடைபெற்றது.
அப்போது வங்கதேச நவாப் சிராச் உத்தவ்லாவின் படைத் தளபதி மிர் ஜாபர், கிழக்கிந்திய கம்பெனியுடன் ரகசியமாக கைகோத்தார். மிர் ஜாபரின் சதியால் நவாப் சிராச் உத் தவ்லா போரில் தோல்வி அடைந்தார். இந்திய வரலாற்றில் துரோகத்தின் சின்னமாக மிர் ஜாபர் கருதப்படுகிறார்.
பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் நேற்று ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “இன்றைய நவீன கால மிர் ஜாபர்- ராகுல் காந்தி’’ என்று விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறும்போது, ‘‘முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் (1977-79), அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக் உடன் தொலைபேசியில் பேசினார். இந்தியாவின் ரா உளவாளிகள் அளித்த தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் அதிபரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பிறகு பாகிஸ்தானில் செயல்பட்ட இந்தியாவின் ரா உளவாளிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இதற்கு மொராஜி தேசாயின் தொலைபேசி உரையாடலே முக்கிய காரணம். நவீனகால மொராஜி தேசாய் ஆக அமைச்சர் ஜெய்சங்கர் செயல்படுகிறார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT