Published : 18 May 2025 12:00 AM
Last Updated : 18 May 2025 12:00 AM

சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு பயணம்: முழு விவரம்

புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர்.

காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்​திய கொடூர தாக்குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்கு நேரடி தொடர்பு இருப்​பது தெரியவந்த​து. இதையடுத்​து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு இந்​தியா பதிலடி கொடுத்​தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிர​வா​தி​கள் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்திய படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் அவை அனைத்தையும் நடுவானிலேயே தகர்த்து அழித்தது. இந்த மோதல் ஒருசில நாட்கள் நீடித்த நிலையில், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

எனினும், பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலை​யில், தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, நிதிஉதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு உதவி செய்வது என தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தீவிரவாதத் துக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதா​ரங்​களு​டன் விளக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்ளது. இதற்காக, அனைத்து கட்சி எம்​.பி.க்​கள் அடங்​கிய 7 குழுக்​களை உலகின் பல நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ரவிசங்​கர் பிர​சாத், வைஜெ யந்த் பாண்​டா (பாஜக), சசி தரூர் (காங்​கிரஸ்), கனி​மொழி (திமுக), சஞ்​சய் குமார் ஜா (ஐஜத), சுப்​ரியா சுலே (என்சிபி - சரத்​ப​வார்), ஸ்ரீ​காந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகிய 7 எம்.பி.க்களும் அந்த குழுக்​களுக்கு தலைமை வகிப்​பார்​கள். ஒவ்வொரு குழு​விலும் பாஜக, காங்​கிரஸ், திமுக, திரிணமூல், ஐஜத, என்​சிபி (சரத் பவார்), பிஜு ஜனதா தளம், சிவசேனா (உத்​தவ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 5 முதல் 8 எம்​.பி.க்​கள் இடம்​பெறு​வார்​கள். வெளி​யுறவு அமைச்​சகத்​தின் மூத்த அதி​காரி ஒரு​வரும் இக்குழுவில் இடம்​பெறுவார். இந்த குழுக்​களின் ஒருங்​கிணைப்​பாள​ராக நாடாளு​மன்ற விவ​கார துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு இருப்​பார்.

இந்த ​குழு​வினர் பிரிட்​டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்​பான், தென் ஆப்​பிரிக்கா உட்பட பல்வேறு நாடு​களுக்கு 10 நாட்​கள் பயணம் மேற்கொள்​வார்​கள். இந்த பயணம் வரும் 23-ம் தேதி தொடங்​கு​கிறது என்று மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரி​வித்​தார். இந்த பயணத்​தின்போது, பாகிஸ்​தானின் தீவிரவாத ஆதரவு செயல்பாடுகள், பஹல்காம் தாக்​குதலின் பின்​னணி, ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை, இந்​தி​யா​வுக்கு எதி​ரான பாகிஸ்​தானின் பொய் பிரச்​சா​ரங்​கள் ஆகியவை குறித்து உலக நாடு​களின் தலை​வர்​களிடம் எம்​.பி.க்​கள் ஆதா​ரங்​களு​டன் எடுத்​துரைப்பார்கள்.

இந்​தி​யா​வுக்கு எதி​ராக இது​வரை நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதல்​களில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்​பு, இதில் அந்த ​நாட்​டின் ராணுவம், உளவு அமைப்​பான ஐஎஸ்ஐ ஆகியவை எவ்​வாறு பின்னி பிணைந்​துள்ளன என்பதற்கான முழு ஆதா​ரங்களை வெளி​யுறவு துறை, நாடாளு​மன்ற விவ​கார துறை, உள்துறை அமைச்சகங்கள் இணைந்து ஆவணங்​களாக தயாரித்து வரு​கின்​றன. எம்​.பி.க்​கள் குழு​வினரிடம் இந்த ஆவணங்கள் வழங்​கப்பட உள்​ளன. அவற்​றின் மூலம் உலக நாடு​களின் தலை​வர்​களுக்கு இந்​திய எம்​.பி.க்​கள் விளக்​கம் அளிக்க உள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x