Last Updated : 17 May, 2025 01:18 PM

24  

Published : 17 May 2025 01:18 PM
Last Updated : 17 May 2025 01:18 PM

மத்திய குழுவுக்கு 4 எம்.பி.க்களை பரிந்துரைத்த காங்கிரஸ்; சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு! 

பிரதமர் மோடியுடன் சசிதரூர் - கோப்புப்படம்

புதுடெல்லி: பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்பிகளைத் தவிர்த்து, மத்திய அரசு சசி தரூரின் பெயரை தேர்வு செய்துள்ளது. இதனால் திருவனந்தபுரம் எம்.பி.க்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே மோதல் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாடு குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுவினை வழிநடத்த இருக்கும் ஏழு எம்பிகளில் சசிதரூரும் ஒருவராவார்.

இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளிக்கும் குழுவுக்காக காங்கிரஸ் பரிந்துரைத்த நான்கு பேரில் சசி தரூரின் பெயர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “நேற்று காலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு காங்கிரஸ் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து விளக்கம் அளிக்க வெளிநாடு செல்ல இருக்கும் குழுவுக்காக நான்கு எம்.பி.களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நேற்று மதியம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு, எம்.பி.கள் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், சையது நசீர் ஹுசைன் மற்றும் அம்ரீந்தர் சிங் ராஜா ஆகியோரை பரிந்துரைத்து கடிதம் எழுதினார்.” என்றார்.

முன்னதாக, அனைத்துக் கட்சி குழு குறித்த அறிவிப்பைப் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மிக முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற எங்கள் பகிரப்பட்ட செய்தியை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்வார்கள். வேறுபாடுகளுக்கு அப்பால், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு.” என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x