Published : 17 May 2025 11:13 AM
Last Updated : 17 May 2025 11:13 AM
புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் அது குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்கு தலைமை தாங்கும் ஏழு எம்.பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், திமுக எம்.பி கனிமொழி, என்சிபி எம்.பி சுப்ரியா சுலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி தாக்குதலான ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களின் பெயர்களை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பைப் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மிக முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற எங்கள் பகிரப்பட்ட செய்தியை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்வார்கள். வேறுபாடுகளுக்கு அப்பால், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சசி தரூருடன், பிரதிநிதிகளை வழிநடத்தும் மற்ற எம்.பி.க்கள் விவரம்:
ரவி சங்கர் பிரசாத் (பாஜக)
சஞ்சய் குமார் ஜா (ஜேடியு)
பைஜயந்த் பாண்டா (பாஜக)
கனிமொழி கருணாநிதி (திமுக)
சுப்ரியா சுலே (என்சிபி)
ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா)
இவர்கள் தலைமையிலான ஒவ்வொரு குழுவிலும் 5–6 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு இவர்கள் பயணம் செய்வார்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் மே 22 க்குப் பிறகு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் பங்கை வெளிச்சம் போட்டு காட்டவும், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச ஆதரவை ஒருங்கிணைக்கவும் மத்திய அரசு இந்த ராஜதந்திர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT