Published : 16 May 2025 06:08 PM
Last Updated : 16 May 2025 06:08 PM
போபால்: “பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ராணுவம் தலைவணங்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா பேசியிருப்பது அரசியல் சர்ச்சையாகியுள்ளது. இந்தப் பேச்சு மலிவானது என கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்தியப் பிரதேச துணை முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் தேவ்தா பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “நாட்டின் ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள், பிரதமர் மோடிக்கு தலைவணங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச பாஜக அரசின் துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு மலிவானது. வெட்கக்கேடானது. இது ராணுவத்தின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் அவமானம். ஒட்டுமொத்த தேசமும் இன்று ராணுவத்தைக் கொண்டாடி வரும் நேரத்தில் பாஜக தலைவர்கள் நமது துணிச்சலான ராணுவத்தைப் பற்றி தாழ்வான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பாஜகவும், ஜெகதீஷ் தேவ்தாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கூட்டம் ஒன்றில் பேசும் மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா, "அங்கு (பஹல்காம்) சுற்றுலா பயணிகளின் மதம் பற்றிக் கேட்டு பின்பு கொல்லப்பட்டது எனது இதயத்தில் பெரும் கோபமாக இருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண் முன்பாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொல்லப்பட்டனர். நாடு பழிவாங்க விரும்பியது. நாம் பிரதமருக்கு நன்றி கூற வேண்டும். ஒட்டுமொத்த நாடும், ராணுவமும், வீரர்களும் அவருக்கு தலைவணங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எதிர்வினை: காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றியுள்ள மத்தியப் பிரதேச பாஜக ஊடக பிரிவு தலைவர் ஆஷிஷ் அகர்வால், "காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு நாட்டின் மீதும் ராணுவத்தின் மீதும் மரியாதை இல்லை. தங்களுக்கு ஏற்றவாறு வார்த்தைகளையும் உணர்வுகளையும் திரித்துக் கூறுவது அவர்களுக்கு கை வந்தது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் மற்றும் வீரர்களை நாடு வணங்குகிறது என்று ஜெகதீஷ் தேவ்தா தெளிவாக கூறுகிறார். இதை அரசியலாக்க காங்கிரஸ் விரும்பினால், அவர்கள் அதைச் செய்யட்டும். ஆனால், நமது ராணுவத்தின் துணிச்சல் மற்றும் வீரத்துக்கு தலைவணங்க பாஜக தொண்டர்களும் தலைவர்களும் ஒன்றுபட்டு நிற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ம.பி துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா மற்றும் ம.பி அமைச்சர் விஜய் ஷா ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து, அவர்கள் பதவி விலக வலியுறுத்தி மத்தியப் பிரதேசம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கண்டனம்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா, ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, விஜய் ஷா மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் முன்ஜாமீன் கோரியும் விஜய் ஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறும்போது, “அமைச்சரின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு நாளில் ஒன்றும் நடந்துவிடாது. முன்ஜாமின் வழங்க முடியாது. உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்” என்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT