Published : 16 May 2025 03:05 PM
Last Updated : 16 May 2025 03:05 PM
அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அளவுக்கு மதுபான ஊழல் நடந்ததாக தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர் கொல்லு ரவீந்திரன் குற்றம் சாட்டினார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒரு பெரிய மதுபான ஊழல் நடந்ததாக ஆந்திர கலால் துறை அமைச்சர் கொல்லு ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் மற்றும் நிதி ஆதாயத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபான பிராண்டுகளுக்கு சாதகமாக செயல்பட தானியங்கி ஆர்டர் செய்யும் முறையை முடக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆந்திராவில் நடந்ததாகக் கூறப்படும் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் மே 9 அன்று பணமோசடி வழக்கைப் பதிவு செய்தது. 2019 மற்றும் 2024 க்கு இடையில், மதுபானக் கொள்கை சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் நன்கு திட்டமிடப்பட்ட ரூ.3,200 கோடி ஊழல் நடத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறியது. முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் ராஜ் காசிரெட்டி, இந்த சதியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
விநியோகத் தரவுகளின் அடிப்படையில் ஆர்டர்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட அமைப்பான சி டெல் (C-Tel) தளத்தை அகற்றி, கமிஷன்களை வசூலிக்க 43 குறிப்பிட்ட பிராண்டுகளை முன்னிலைப்படுத்தியதாக ரவீந்திரன் கூறினார். மேலும், முந்தைய ஆட்சியில் சொந்த லேபிள்களை உற்பத்தி செய்ய டிஸ்டில்லரிகளை கூட ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு அச்சுறுத்தி கையகப்படுத்தியதாக அவர் கூறினார். 2018-க்கு முன்பு மாநிலத்தில் எந்த இருப்பும் இல்லாத ஆதான், லீலா, NV, V9, சோனா மற்றும் முனாக் போன்ற அதிகம் அறியப்படாத மதுபான பிராண்டுகளின் தோற்றம் குறித்தும் அமைச்சர் ரவீந்திரன் கேள்வி எழுப்பினார்.
மேலும், “ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.99,413.5 கோடி மதிப்புள்ள மதுபான விற்பனை முற்றிலும் ரொக்கமாகவே செய்யப்பட்டது. ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை கூட இல்லை. இந்தப் பணம் எங்கே போனது? இந்தப் பணம் யாருடைய அரண்மனைகளுக்குப் பாய்ந்தது?” என்று அவர் கேள்வி எழுப்பினார். ஆந்திர மதுபான ஊழலின் அளவை டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கே. கவிதா உள்ளிட்டவர்களை கைது செய்ய வழிவகுத்த ரூ.100 கோடி டெல்லி கலால் வழக்கோடு அவர் ஒப்பிட்டார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி விஜய் சாய் ரெட்டியின் மருமகன் சரத் சந்திர ரெட்டி டெல்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய ரவீந்திரன், “ஆந்திரப் பிரதேசத்தில் மிகப் பெரிய ஊழலில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியும்?. இது பொது சுகாதாரத்துக்கு எதிரான குற்றம். இந்த முறைகேடு காரணமாக தரமற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத மதுபானங்கள் சந்தைக்குள் அனுப்பப்பட்டன. இதனால் இறப்புகள், நோய்கள் மற்றும் டயாலிசிஸ் வழக்குகள் அதிகரித்தன.” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT