Published : 16 May 2025 02:34 PM
Last Updated : 16 May 2025 02:34 PM
புதுடெல்லி: நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது. மே 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இது நடைபெற இருக்கிறது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் மூண்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதலும் வலுத்தது. இதனிடையே அமெரிக்கா தலையிட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது புகார் கூறத் தொடங்கியுள்ளன.
இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’எனும் பெயரில் கூட்டங்களை நடத்த இருக்கிறது. இந்தக் கூட்டங்கள் மே 20 முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இக்கூட்டங்களில், மத்திய அரசு தேசிய பாதுகாப்பை கையாள்வது குறித்தும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்தும் கேள்விகளை எழுப்ப உள்ளது.
காங்கிரஸ் நடத்தவுள்ள இந்தக் கூட்டங்களில் ராணுவ வீரர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், “நமது ஆயுதப் படைகளின் உச்சபட்ச வீரம் மற்றும் வெற்றியைப் போற்றும் வகையில் இந்தியா முழுவதும் ‘ஜெய் ஹிந்த் சபா’ நடத்தப்படும். இதில், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்தும் நாம் கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மே 20 முதல் 30 வரை நடைபெற இருக்கும் இக்கூட்டங்கள் 15 மாநிலங்களின் முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. இதில் டெல்லி, சிம்லா, ஹல்துவானி, பாட்னா, ஜபல்பூர், புனே, கோவா, பெங்களூரு, கொச்சி, குவாஹாட்டி, கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வர் மற்றும் பதான்கோட் ஆகிய நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பின்பு பாஜக சார்பிலும் நாடு முழுவதிலும் மூவர்ண கொடி யாத்திரைகள் நடைபெற்றன. இதற்கு எதிராக காங்கிரஸ் இந்த ‘ஜெய் ஹிந்த் சபா’-க்களை நடத்துவதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்திற்கு பின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை பாஜக அரசியல் மயமாக்குவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் மீது பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிப்பதாகவும் குற்றம் சுமத்தி உள்ளது.
இந்திய நாட்டுக்கே உரிய ராணுவ நடவடிக்கை, ஆயுதப்படைகள் நாட்டுக்குச் சொந்தமானதாக உள்ளது. பாஜக ராணுவ நடவடிக்கையை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கிறது.” எனத் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதிகள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் காங்கிரஸின் செயற்குழு கோரியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT