Published : 15 May 2025 07:25 AM
Last Updated : 15 May 2025 07:25 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அந்நாட்டு விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட 50 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 10-ம் தேதி இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் விமானப் படை, ராணுவத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பல்வேறு பதுங்கு குழிகள், சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் ராணுவத்தின் பல தளங்களை இந்தியா தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. சுமார் 12-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் நேற்றுமுன்தினம் கூறியதாவது: இந்திய ராணுவ தளங்கள், பொதுமக்கள் வாழும் இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ஏவுகணைகளும், ட்ரோன்களும் முறியடித்தன. அதற்கு பதிலடியாகபாகிஸ்தானின் சர்கோதா மற்றும் போலாரி விமானப் படை தளங்களில் இந்தியா கடும் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள வெடிபொருள் கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த பகுதிகளில்தான் பாகிஸ்தானின் எப்-16, ஜே-17 போன்ற போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் விமானப் படை அதிகாரி உஸ்மான் யூசுப் மற்றும் விமானப் படையின் 4 வீரர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல போர் விமானங்கள் நொறுங்கி உள்ளன.
நூர் கான், ரபிகியூ, முரித், சுக்குர், சியால்கோட், பஸ்ருர், சுனியன், சர்கோதா, ஸ்கர்தூ, பலோரி, ஜகோபாபாத் போன்ற பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் சேதம் அடைந்தன. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்குப் பின்பும் எடுக்கப்பட்ட சேட்டிலைட் படங்கள் அதை உறுதிப்படுத்தி உள்ளன.
வீடியோக்கள் வெளியீடு: முன்னதாக இந்திய தாக்குதலில் நொறுங்கி போன பாகிஸ்தானின் விமானப் படை தளங்கள் தொடர்பான வீடியோவை கடந்த திங்கட்கிழமை இந்திய விமானப் படை வெளியிட்டது. அதேபோல் பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே சுட்டு வீழ்த்திய வீடியோவும் வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT