Published : 11 May 2025 11:37 AM
Last Updated : 11 May 2025 11:37 AM
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் இந்திய எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்ற தகவல் களத்தில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
போர் பதற்றத்தை அடுத்து முன்னெச்சரிக்கை கருதி இந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தடைகளும் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று காலையில் திரும்ப பெற்றுள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இன்று (மே 11) காலை முதல் ட்ரோன் தாக்குதல், குண்டு வீச்சு போன்ற எந்தவித தாக்குதலும் இந்தியா - பாகிஸ்தானின் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள பகுதிகளில் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இதை மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போலீஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தில் இயல்பு நிலை: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக ட்ரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல், குண்டு வீச்சு போன்றவற்றை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் எதிர்கொண்டன. பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் முயற்சியை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டது. அதை சமாளிக்க நேற்று இரவும் இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே எந்தவித தாக்குதலும் இந்திய எல்லையில் நடைபெறவில்லை என தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உதம்பூர், சம்பா, ரஜோரி, ஜம்மு, உரி, அக்னூர், ஸ்ரீநகர், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், பதன்கோட், பெரோஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு படை எதிர் தரப்பின் நடவடிக்கையை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சொல்வது என்ன? - “நம்பிக்கை என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால், நாம் பாகிஸ்தானை நம்ப முடியாது. ஏனெனில், அவர்கள் எப்போது போர் நிறுத்த அத்துமீறலில் ஈடுபடுவார்கள் என்பது நமக்கு தெரியாது. இதற்கு முன்பும் அவர்கள் இதனை செய்துள்ளனர்” என ஜம்மு காஷ்மீரின் சம்பாவை சேர்ந்த ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
“இப்போது அமைதி திரும்பி உள்ளது. சில வதந்திகள் பரப்பப்பட்டது. அதை யாரும் நம்ப வேண்டாம். போதுமான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்களின் நகர்வு எதுவும் இன்று காலை முதல் இல்லை. மக்கள் பீதி அடைய வேண்டாம்” என அமிர்தசரஸின் காவல் துறை அதிகாரி யத்விந்தர் சிங் கூறியுள்ளார்.
எப்போதுமே பாகிஸ்தான் சொல்வது ஒன்றும் செய்வது வேறாகவும் இருக்கும். அவர்களுக்கு நாம் தக்க பாடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் இதை செய்ய மாட்டார்கள். சிறப்பாக செயல்பட்ட நமது பாதுகாப்பு படையை எண்ணி நான் பெருமை கொள்கிறேன் என ராஜஸ்தானின் ஜெய்சல்மாரை சேர்ந்த உள்ளூர் வாசி ஒருவர் கூறியுள்ளார்.
“பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது. அதோடு நமது ராணுவம் அவர்களுக்கு தக்க பாடம் கொடுத்துள்ளது. அதனால் அமிர்தசரஸ் மக்கள் ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். இங்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். நேற்று இரவு போர் நிறுத்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது” என அமிர்தசரஸை சேர்ந்த மஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி - வாகா எல்லை மூடல்,விசாக்களை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை இந்தியா மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா முடுக்கி விட்டது. பஹல்காம் தாக்குதல் பல பெண்களின் குங்குமம் அழிய காரணமாக இருந்ததால், அதை நினைவுகூரும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. பாகிஸ்தானுக்குள் 9 இடங்களில் செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றின் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தகர்த்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியது. எல்லை பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. எனினும், இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் கடுமையாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.
அணு ஆயுத நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது உலக நாடுகளை கவலையடைய செய்தது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால், போர் நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சோரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT