Published : 10 May 2025 11:28 PM
Last Updated : 10 May 2025 11:28 PM
இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை பாகிஸ்தான் மீறி வருகிறது. இந்திய ராணுவம் இந்த எல்லை ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து சமாளித்து வருகிறது. இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சனிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: ” கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இடையே இன்று மாலை ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. கடந்த சில மணி நேரங்களாக, இந்தப் புரிந்துணர்வை பாகிஸ்தான் மீறி வருகிறது. இந்திய ராணுவம் இந்த எல்லை ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து சமாளித்து வருகிறது. இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த ஊடுருவலைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆயுதப்படைகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன, மேலும் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் மீண்டும் அத்துமீறல்கள் ஏற்பட்டால் அவற்றைக் கடுமையாகச் சமாளிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT