Published : 09 May 2025 08:15 AM
Last Updated : 09 May 2025 08:15 AM
புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடத்தினர். இந்த விமானம் ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்தி செல்லப்பட்டது. விமானத்தில் 178 பயணிகள், 2 விமானிகள், 13 ஊழியர்கள் என 193 பேர் இருந்தனர்.
அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு சார்பில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி இந்திய சிறைகளில் இருந்த 3 தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு, விமான பயணிகள் மீட்கப்பட்டனர். இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலுக்கு தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் என்பவர் மூளையாக செயல்பட்டார்.
பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் தங்கியிருந்தார். இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின்போது அவர் உயிரிழந்தார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தம்பியான அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டிருப்பது இந்திய ராணுவத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.
காந்தகார் விமான கடத்தலின்போது இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 3 பேரில் மசூத் அசாரும் ஒருவர். ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரும், அவரது 4 பாதுகாவலர்களும் உயிரிழந்து உள்ளனர். பாவல்பூரில் உள்ள தீவிரவாத முகாமில் மசூத் அசார் தங்கியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் அங்கிருந்து வெளியேறியதால் உயிர்தப்பி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT