Published : 08 May 2025 12:05 AM
Last Updated : 08 May 2025 12:05 AM

குண்டு மழை, ஏவுகணைகள்: ‘ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது எப்படி? 

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவத்தின் பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை பெண் அதிகாரி விங் கமாண்டர் வியாமிகா சிங்.

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தின. சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 70 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்,இது குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்றும் பாகிஸ்தான் கூறியது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தன. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முப்படை தளபதிகள், மத்திய அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பாகிஸ்தானில் எங்கு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து முப்படைகளும் ஆலோசித்து இலக்குகளை அடையாளம் கண்டன. பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள முசாபராபாத், கோட்லி, பாவல்பூர், ரவாலாகோட், சக்ஸ்வாரி, பிம்பெர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சாக்வெல் என்ற 9 இடங்களில் லஷ்கர் -இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் இரு முக்கிய தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றின் மீது ஏவுகணைகளை வீச முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது.

இந்த தீவிரவாத முகாம்கள் மீது முப்படைகளும் இணைந்து நேற்று அதிகாலை 1.05 மணிக்கு தாக்குதலை தொடங்கின. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகங்கள் உட்பட 9 தீவிரவாத முகாம்கள் மீது 24 ஏவுகணைகள் வீசப்பட்டன நேற்று அதிகாலை 1.30 மணி வரை 25 நிமிடங்களுக்கு பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. தரையிலிருந்தும், விமானத்திலிருந்தும் ஏவுகணைகள் வீசப்பட்டன. தாக்குதல் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, செயற்கைக்கோள் வழிகாட்டுதல் படி செயல்படும் ஏவுகணைகள் மற்றும் லேசர் வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இந்திய விமானப்படை விமானங்கள் ‘ஸ்கால்ப்’ மற்றும் ஹேமர் வகை ஏவுகணைகளை வீசிதாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 70 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகத்தில் குண்டு வீசப்பட்டதில், தலைவர் மசூத் அசார் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இறந்தனர். இந்த தாக்குதல்களை கண்காணிக்க ட்ரோன்களும் அனுப்பப்பட்டன. தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுத கிடங்குகள் ஆகியவை அழிக்கப்பட்டதை ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் உறுதி செய்தன. இதில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிக்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய விவரங்களை வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தரைப்படை கர்னல் சோபியா குரேஷி, விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கினர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்று கணக்கிடப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். கர்னல் சோபியா கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் தீவிரவாத கட்டமைப்புகளை உருவாக்கி, தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் மேலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்தகவல்கள் தெரிவித்தன. இதுபோன்ற தாக்குதல்கள் இனிமேல் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த தீவிரவாத முகாம்கள் தற்போது குறிவைத்து அழிக்கப்பட்டு உள்ளன’’ என்றார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற எல்லைகள் ரோடு அமைப்பின் உதய தின நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘நமது முப்படைகள் எடுத்த நடவடிக்கையை உலக நாடுகள் பார்வையிட்டன. மிக கவனமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. இதற்காக நாட்டின் சார்பில் முப்படையினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முப்படைகளுக்கும் முழு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகள்’’ என்றார்.

மீண்டும் பதிலடி: பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உலக நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு விளக்கம் அளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால், பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கினால், மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என்றார்.

குடியரசுத் தலைவரிடம் விளக்கம்: ‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படைகள் துல்லிய தாக்குதல் நடத்தியது குறித்த விவரங்களை திரவுபதி முர்முவிடம், பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்த நடவடிக்கைக்காக பாதுகாப்பு படையினருக்கும், அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடிக்கும் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.

பெருமை மிக்க தருணம்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப்பின் மத்தியஅமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது ‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பெருமை மிக்க தருணம். தீவிரவாதத்தை ஒருபோதும் மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது’’ என பிரதமர் மோடி கூறினார். அதன்பின் ‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இந்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x