Published : 07 May 2025 12:06 PM
Last Updated : 07 May 2025 12:06 PM
புதுடெல்லி: பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை வரவேற்றுள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இதுதான் தன் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியும் இதில் ஒருவர். அவர் தனது மனைவியுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மனைவி கண் முன்னே கொல்லப்பட்டார்.
லஷ்கர் இ தொய்பாவின் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் அரசு, ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை வழங்கியது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இந்த தாக்குதலை வரவேற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், அவர் எங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவரது ஆன்மா சாந்தியடையும்” என்று தெரிவித்துள்ளார்.
சுபம் திவேதியின் தந்தை சஞ்சய் திவேதி, "நான் தொடர்ந்து செய்திகளைப் பார்த்து வருகிறேன். இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன், நாட்டு மக்களின் வலிக்கு மதிப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை இந்திய ராணுவம் அழித்த விதத்திற்காக ராணுவத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து எனது முழு குடும்பமும் நிம்மதியாக உணர்கிறது." என்று கூறினார். சுபம் திவேதியின் உறவினரான மனோஜ் திவேதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியாக நீதி வழங்கப்பட்டதாகக் கூறினார்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மற்றொருவரின் மனைவி பிரகதி ஜக்டேலும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். "நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதை பிரதமர் மோடி பாகிஸ்தானுக்குக் காட்டியுள்ளார். #OperationSindoor மூலம், பிரதமர் மோடி பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவார் என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT