Last Updated : 29 Apr, 2025 06:24 PM

 

Published : 29 Apr 2025 06:24 PM
Last Updated : 29 Apr 2025 06:24 PM

காஷ்மீரில் பல சுற்றுலா பகுதிகள் மூடல் - பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கள நிலவரம் என்ன?

காஷ்மீரில் வெறிச்சோடி காணப்படும் சுற்றுலாப் பகுதி.

புதுடெல்லி: பஹல்காமின் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் பல சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால், அம்மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ல் அனந்தநாக்கின் பைஸாரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் வந்த சுற்றுலாவாசிகள் 26 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் அங்கு வந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது முதன்முறையாக நடந்தப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதலால், ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு வகை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக, காஷ்மீரின் 12 முக்கிய சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த சுற்றறிக்கை அல்லது அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணமான இந்த நடவடிக்கையால் அந்த மாநில மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டவற்றில் குரிஜ், பங்கஸ், தூத்பத்ரி, சிந்தன் டாப், கொகேர்நாக், துக்சம், மோர்கன டாப், அச்சா பல், வெரிநாக் உள்ளிட்ட உயரமான மலைகளின் சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. இவற்றில் சுமார் 50 சுற்றுலா முனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் அமைந்திருந்த பல பண்ணை வகை தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. காஷ்மீரிலுள்ள 87 பூங்காக்களில் 48 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றின் தென் காஷ்மீரில் பல மொகல் பூங்காக்களும் இடம்பெற்றுள்ளன.

மூடப்பட்டவற்றில் பலவும் புதிய சுற்றுலாப் பகுதிகளாக கடந்த 10 வருடங்களில் உருவானவை. முக்கியமாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டி அமைந்த சுற்றுலா பகுதிகளும் உள்ளன. வரும் நாட்களில் மூடப்படும் பட்டியலில் மேலும் சில சுற்றுலாப் பகுதிகள் சேரும் வாய்ப்புகள் உள்ளன.

தீவிரவாதத் தாக்குதல் வரலாற்றில் பஹல்காம் சம்பவம் முதன்முறையாக சுற்றிலாவாசிகளை குறிவைத்திருந்தது, இந்த தாக்குதலால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்தது. ஜம்மு - காஷ்மீருக்குள் அச்சத்தையும் பீதியையும் தூண்டியது. இதன் விளைவாக பள்ளத்தாக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வெளியேறினர். இந்தப் பகுதிகளுக்கு புதிதாக வரும் சுற்றுலாவாசிகள் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டன.

கரோனா பரவல் காலத்தில் இருந்ததை போல், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவாசிகள் வெறிச்சோடாத் துவங்கி உள்ளன. இம்மாநிலத்துக்கு வருவதற்காக ஏற்கெனவே பதிவாகி இருந்த தங்கும் விடுதிகளை சுற்றுலாவாசிகள் ரத்து செய்துள்ளனர். இதன் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையால், அம்மாநில மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த 2019-ல் ஜம்மு - காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. அதுவரையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் சூழ்ந்திருந்தது அம்மாநிலம். இதையடுத்து பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட சட்டப்பேரவை தேர்தலும் ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்பட்டது. இதன் பிறகு காஷ்மீருக்கு வருகைதரும் சுற்றுலாவாசிகள் எண்ணிக்கை கூடின.

2024-ம் ஆண்டின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரைப் பார்வையிட 2 கோடியே 36 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 9,500 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அம்மாநிலத்தின் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் நிரம்பியிருந்தன. டாக்சிகள் முன்பதிவு செய்யப்பட்டு, காஷ்மீரின் விற்பனை சந்தைகள் பரபரப்பாக இருந்தன. இங்குள்ள சுற்றுலாத் துறை மாநிலத்தின் பொருளாதாரத்தில் 8 சதவிகிதம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுலா மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x