Published : 26 Apr 2025 07:18 AM
Last Updated : 26 Apr 2025 07:18 AM
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் வெடிவைத்து தகர்த்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் 4 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு தீவிரவாதிகள் அடில் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
அனந்தநாக் பகுதியில் உள்ள அடில் வீட்டிலும், அவந்திபோரா பகுதியில் உள்ள ஆசிப் வீட்டிலும் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெடிப்பொருட்களை பாதுகாப்புப் படை வீரர்கள் வெடிக்க செய்தனர். இதில் ஒரு வீடு தரைமட்டமானது. மற்றொரு தீவிரவாதியின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரை சேர்ந்த அடில் கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு தீவிரவாத பயிற்சி பெற்ற பின்னர் கடந்த ஆண்டு காஷ்மீர் திரும்பியுள்ளார். இவர்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த வழி நடத்தி சென்றுள்ளார். இவர்களை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT