Published : 26 Apr 2025 06:49 AM
Last Updated : 26 Apr 2025 06:49 AM

இந்தியாவை விட்டு வெளியேற கெடு: வாகா எல்லையில் குவியும் பாகிஸ்தானியர்கள்

அட்டாரி: ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

காஷ்மீரில் மினி சுவிட்சர்லாந்து என்ற அழைக்கப்படும் பைசரன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தானியர்கள் விசாக்கள் வரும் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் அவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விசாக்களை அதிரடியாக ரத்து செய்துள்ளதையடுத்து இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் பாகிஸ்தானுக்குள் செல்ல பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள வாகா-அட்டாரி எல்லைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பாகிஸ்தானியர் ஒருவர் கூறுகையில், “ பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்கிறேன். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குல் நடத்தியதாக கேள்விப்பட்டேன். 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றார்கள். அதனால் கிளம்பிவிட்டேன்" என்றார்.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை திரும்பி அனுப்பும் நடவடிக்கையில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x