Published : 26 Apr 2025 12:10 AM
Last Updated : 26 Apr 2025 12:10 AM

வக்பு என்பது முஸ்லிம் மத அமைப்பு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு - முழு விவரம்

புதுடெல்லி: வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதி​ரான வழக்​கில் 1,332 பக்கங்கள் கொண்ட விரி​வான பதில் மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தாக்​கல் செய்துள்ளது.

நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம், ஆம் ஆத்​மி உள்​ளிட்ட கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்​னா, நீதிப​தி​கள் சஞ்​சய் குமார், கே.​வி.​விஸ்​வ​நாதன் அமர்வு இந்த வழக்கை விசா​ரித்து வரு​கிறது. கடந்த 16, 17-ம் தேதி​களில் உச்ச நீதி​மன்​றத்​தில் விரி​வான விசா​ரணை நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து, மத்​திய அரசு ஒரு வாரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும் என்று தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா கடந்த 17-ம் தேதி உத்​தர​விட்​டார்.

அதன்​படி, உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு சார்​பில் 1,332 பக்​கங்​கள் கொண்ட பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்டுள்ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: வக்பு திருத்த சட்​டத்​தில் மத சுதந்​திரம் பறிக்​கப்​படும் என்று வதந்​தி​கள் பரப்​பப்​பட்டு வரு​கின்​றன. இந்த சட்​டம் யாருடைய மத சுதந்​திரத்​தை​யும் பறிக்​காது. வக்பு நிர்​வாகத்​தில் திறம்​பட்ட மேலாண்​மை, வெளிப்​படைத்​தன்​மையை அதி​கரிக்​கவே சட்​டத்​தில் திருத்​தங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன.

நாடாளு​மன்ற கூட்​டுக் குழு​வின் பரிசீலனைக்கு பிறகு சட்​டத்​தில் பல்​வேறு திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டன. இரு அவை​களி​லும் நீண்ட நேரம் விவாதம் நடத்​தப்​பட்​டது. பெரும்​பான்மை எம்.​பி.க்​களின் ஆதர​வுடன் சட்​டம் நிறைவேற்​றப்​பட்டுள்​ளது. பொது​வாக, மக்​களின் அடிப்​படை உரிமை​கள் மீறல், சட்​டப்​பூர்​வ தன்மை ஆகியவை குறித்து மட்​டுமே உச்ச நீதி​மன்​றம் ஆய்வு செய்​ய​லாம்.

வக்பு நிலங்கள் அதிகரிப்பு: வக்பு என்​பது முஸ்​லிம் மத அமைப்பு கிடை​யாது. அது ஒரு சட்​டப்​பூர்​வ​மான அமைப்பு ஆகும். நாடு சுதந்​திரம் அடைவதற்கு முன்பு இருந்ததை​விட தற்​போது வக்பு நிலங்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்துள்​ளது. அதாவது, நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு 20 லட்​சம் ஹெக்​டேர் நிலங்​கள் வக்பு நிலங்​களாக அறிவிக்​கப்​பட்டுள்​ளன.

இந்த சூழலில் அரசு மற்​றும் தனி​யார் நிலங்​கள் முறை​கே​டாக அபகரிக்​கப்​படு​வதை தடுக்​கவே வக்பு சட்​டத்​தில் திருத்​தங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன. மத்​திய வக்பு கவுன்​சிலில் மொத்​தம் 22 உறுப்​பினர்​கள் உள்​ளனர். இதில் முஸ்​லிம் அல்​லாத 4 பேர் மட்​டுமே சேர்க்​கப்​படு​வார்கள். இதே​போல, வக்பு வாரி​யங்​களில் 11 உறுப்​பினர்​கள் உள்​ளனர். இதில் முஸ்​லிம் அல்​லாத 3 பேர் மட்​டுமே சேர்க்​கப்​படு​வார்கள். இதனால் வக்பு கவுன்​சில், வாரி​யங்​களில் முஸ்​லிம்​களின் பெரும்​பான்மை குறைந்​து​விடும் என்று கூறு​வது தவறான கருத்து.

மற்ற மதத்தினர் நியமனம் ஏன்?- முஸ்​லிம் அல்​லாதவர்​களின் சொத்​துகளை​யும் வக்பு வாரி​யங்​கள் உரிமை கொண்​டாடு​கின்​றன. இதற்கு தீர்வு காணவே, வக்பு கவுன்​சில், வாரி​யங்​களில் முஸ்​லிம் அல்​லாதோர் நியமிக்​கப்பட உள்​ளனர். இந்து மத அமைப்​பு​களுக்கும், வக்பு வாரி​யங்​களுக்கும் இடையே பல்​வேறு வேறு​பாடு​கள் உள்​ளன. இந்து மத அமைப்​பு​கள், இந்து அறக்​கட்​டளை​கள் ஆகியவை அந்​தந்த மாநில அரசுகளின் சட்ட வரம்​பில் வரு​கின்​றன. இரண்​டை​யும் ஒப்​பிட முடி​யாது.

மக்களின் புகார்கள் இணைப்பு: வக்பு வாரி​யங்​களால் நிலங்​களை இழந்த மக்​களின் புகார்​கள், விவரங்​கள் பதில் மனுவுடன் இணைக்​கப்​பட்டுள்​ளன. வக்பு திருத்த சட்​டம் தொடர்​பாக பல்​வேறு அமைப்​பு​கள் வழங்​கிய யோசனை​கள், நாடாளு​மன்ற கூட்​டுக் குழு வழங்​கிய பரிந்​துரைகள் உட்பட அனைத்து அம்​சங்​களும் பதில் மனுவுடன் இணைக்​கப்​பட்டுள்ளன. அனைத்து ஆவணங்​களை​யும் உச்ச நீதி​மன்​றம் முழு​மை​யாக ஆய்வு செய்ய வேண்​டும்.

வக்பு திருத்த சட்​டத்​துக்கு இடைக்​கால தடை விதிக்​க ​கூ​டாது. இந்த சட்​டத்தை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்​ட அனைத்து மனுக்​களை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு மத்​திய அரசின் பதில் மனு​வில் கூறப்​பட்டுள்​ளது.

மத்​திய அரசின் பதில் மனு குறித்து மனு​தா​ரர்​கள் தங்​களது பதில் மனுக்​களை உச்ச நீதி​மன்​றத்​தில் அடுத்த 5 நாட்​களில் தாக்​கல் செய்ய அவகாசம் தரப்பட்டுள்ளது. ஏஐஎம்​ஐஎம் கட்சி உட்பட குறிப்​பிட்ட 5 மனுக்​கள் மட்​டுமே விசா​ரணைக்கு ஏற்​றுக்கொள்​ளப்​படும் என்று உச்ச நீதி​மன்​றம் அறி​வித்​துள்​ளது. இதன்​படி, குறிப்​பிட்ட 5 மனு​தா​ரர் ​கள் தரப்​பில் அடுத்த 5 நாட்​களுக்​குள் பதில் மனு தாக்​கல் செய்​யப்​படும். உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே அறி​வித்​த​படி, மே 5-ம் தேதி வழக்கு வி​சா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படும். அன்று உரிய உத்​தர​வுகள் பிறப்​பிக்​கப்​படும்​ என்​று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x