Published : 26 Apr 2025 12:10 AM
Last Updated : 26 Apr 2025 12:10 AM
புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் 1,332 பக்கங்கள் கொண்ட விரிவான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த 16, 17-ம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் விரிவான விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் 1,332 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வக்பு திருத்த சட்டத்தில் மத சுதந்திரம் பறிக்கப்படும் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சட்டம் யாருடைய மத சுதந்திரத்தையும் பறிக்காது. வக்பு நிர்வாகத்தில் திறம்பட்ட மேலாண்மை, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவே சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பிறகு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இரு அவைகளிலும் நீண்ட நேரம் விவாதம் நடத்தப்பட்டது. பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக, மக்களின் அடிப்படை உரிமைகள் மீறல், சட்டப்பூர்வ தன்மை ஆகியவை குறித்து மட்டுமே உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யலாம்.
வக்பு நிலங்கள் அதிகரிப்பு: வக்பு என்பது முஸ்லிம் மத அமைப்பு கிடையாது. அது ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது வக்பு நிலங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வக்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் அரசு மற்றும் தனியார் நிலங்கள் முறைகேடாக அபகரிக்கப்படுவதை தடுக்கவே வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய வக்பு கவுன்சிலில் மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லிம் அல்லாத 4 பேர் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். இதேபோல, வக்பு வாரியங்களில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லிம் அல்லாத 3 பேர் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். இதனால் வக்பு கவுன்சில், வாரியங்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை குறைந்துவிடும் என்று கூறுவது தவறான கருத்து.
மற்ற மதத்தினர் நியமனம் ஏன்?- முஸ்லிம் அல்லாதவர்களின் சொத்துகளையும் வக்பு வாரியங்கள் உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு தீர்வு காணவே, வக்பு கவுன்சில், வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட உள்ளனர். இந்து மத அமைப்புகளுக்கும், வக்பு வாரியங்களுக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்து மத அமைப்புகள், இந்து அறக்கட்டளைகள் ஆகியவை அந்தந்த மாநில அரசுகளின் சட்ட வரம்பில் வருகின்றன. இரண்டையும் ஒப்பிட முடியாது.
மக்களின் புகார்கள் இணைப்பு: வக்பு வாரியங்களால் நிலங்களை இழந்த மக்களின் புகார்கள், விவரங்கள் பதில் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளன. வக்பு திருத்த சட்டம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் வழங்கிய யோசனைகள், நாடாளுமன்ற கூட்டுக் குழு வழங்கிய பரிந்துரைகள் உட்பட அனைத்து அம்சங்களும் பதில் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கூடாது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பதில் மனு குறித்து மனுதாரர்கள் தங்களது பதில் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் அடுத்த 5 நாட்களில் தாக்கல் செய்ய அவகாசம் தரப்பட்டுள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சி உட்பட குறிப்பிட்ட 5 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட 5 மனுதாரர் கள் தரப்பில் அடுத்த 5 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யப்படும். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்தபடி, மே 5-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்று உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT