Published : 25 Apr 2025 08:07 AM
Last Updated : 25 Apr 2025 08:07 AM
சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்கள், மேலும் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதன்படி ஏப்ரல் 27-ம் தேதிக்குள் அனைத்து பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தானியருக்கு மட்டும் ஏப்ரல் 29-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாத் அகமதுக்கு மத்திய வெளியுறவுத் துறை சம்மன் அளித்திருந்தது. இதன்படி டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில் அவர் நேற்று ஆஜரானார். அப்போது பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆலோசகர்கள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அமெரிக்கா எச்சரிக்கை: அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு விடுத்துள்ள பயண அறிவுறுத்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு வன்முறைக்கு வாய்ப்புள்ளது. எனவே, அங்கு செல்ல வேண்டாம். ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதி ஆகிய இடங்களில் வன்முறை அவ்வப்போது நடைபெறுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுற்றுலா தலங்களான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் வன்முறை நடைபெறுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால், எல்லையிலிருந்து 10 கி.மீ தொலைவுக்குள் பயணம் செய்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகளின் தூதர்கள்: ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா, தென்கொரியா, உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை நேற்று சிறப்பு அழைப்பு விடுத்தது.
அந்த நாடுகளின் தூதர்கள் வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு வருகை தந்தனர். அப்போது, பஹல்காம் தாக்குதல் குறித்து ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம்: அசாம் அரசு அறிவிப்பு - அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: கிளர்ச்சி நடவடிக்கைகளால் அசாம் நீண்ட காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை எங்களால் நன்கு உணர முடியும். இதனை நன்கு புரிந்து கொண்டதன் காரணமாகவே, தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் குடும்பங்களுக்கும் ஒரு சிறிய தொகையை நிவாரணமாக வழங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு இருப்பதால், வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாநில எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT