Published : 25 Apr 2025 07:15 AM
Last Updated : 25 Apr 2025 07:15 AM
பஹல்காமில் குதிரை சவாரியை தவிர்த்ததால் உயிர் தப்பினோம் என்று கேரளாவில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் கூறினர். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காமுக்கு கேரளாவில் இருந்து 23 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா சென்றிருந்தனர். தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய இவர்கள் டெல்லி திரும்பி, கேரள இல்லத்தில் தங்கியுள்ளனர்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள பெண் ஒருவர் கூறியதாவது: சம்பவ நாளில் பஹல்காமில் இருந்த நாங்கள் முதலில் பைசரன் பள்ளத்தாக்கு செல்ல திட்டமிட்டோம். ஆனால் குதிரை சவாரிக்கான கட்டணம் அதிகமாக இருந்ததால் அங்கு செல்வதை தவிர்த்துவிட்டு வேறொரு இடத்துக்கு சென்றோம். பிறகு நாங்கள் மீண்டும் பைசரன் நோக்கி செல்லும்போது உரத்த சப்தங்களை கேட்டோம். கடைகள் மூடப்பட்டிருந்தன. மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை. எங்கள் வழிகாட்டியிடம் எங்களை வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டோம். ஆனால் அவர், "நீங்கள் உயிருடன் இருக்க விரும்புகிறீர்களா அல்லது சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
பிறகு நாங்கள் ஓட்டல் அறைக்கு திரும்பி விட்டோம். அங்கு வந்த பிறகுதான் டி.வி.யில் பார்த்து தாக்குதல் பற்றி அறிந்து கொண்டோம். குதிரை சவாரியை தவிர்த்ததால் நாங்கள் உயிர் தப்பினோம். இவ்வாறு அந்தப் பெண் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT