Published : 24 Apr 2025 06:53 AM
Last Updated : 24 Apr 2025 06:53 AM
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த பாரத் பூஷன் தன் மனைவி சுஜாதா மற்றும் 3 வயது மகனுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பாரத் பூஷன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது மனைவி சுஜாதா இந்த சம்பவத்தை விவரிக்கையில், ‘‘ராணுவ உடையில் இருந்த தீவிரவாதிகள் என் கணவரை சூழ்ந்துகொண்டனர். அவரை சுட்டுக்கொல்வதற்கு முன் நீ இந்துவா?’’ என கேட்டனர். அதற்கு அவர், ‘‘இல்லை’’என்றதும் சுட்டுக் கொன்றனர். என்னையும் குழந்தையையும் அவர்கள் சுடவில்லை’’ என்றார்.
ஷிமோகாவை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராம் (48) பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி பல்லவி கூறுகையில், ‘‘என் மகன் அபிஜேயா (18) 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்ததால், அதனை கொண்டாடுவதற்காக காஷ்மீர் வந்தோம்.
நானும் எனது கணவரும் உணவகத்துக்கு சென்றோம். அப்போது மகனை அழைத்து வருமாறு கூறினார். நான் அங்கிருந்து செல்வதற்கு முன்பாகவே துப்பாக்கி சத்தம் கேட்டது. மக்கள் அச்சத்தில் ஓடியதை பார்த்து, கணவரை நோக்கி ஓடினேன். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். என்னால் அங்கு என்ன நடந்தது என்பதை உணர முடியாமல் இடிந்து போய் அழுதேன்.
அங்கிருந்த தீவிரவாதியிடம் போய், ‘‘என் கணவரை கொன்றதை போல என்னையும் சுட்டு கொன்று விடு” என கேட்டேன். அதற்கு அவன், ‘‘உன்னை கொல்ல மாட்டேன். இங்கு நடந்ததை போய் மோடியிடம் சொல்' என பதிலளித்தான். நானும் என் கணவரும் நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும். இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT