Published : 19 Apr 2025 07:12 AM
Last Updated : 19 Apr 2025 07:12 AM

முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘மீண்டும் வேலை வாய்ப்பு அளிப்பதில் முன்னாள் ராணுவத்தினர் நிராகரிக்கப்பட்டால், பாதுகாப்பு படையில் சேர இளைஞர்கள் முன்வரமாட்டார்கள்’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பஞ்சாப் சிவில் சர்வீஸ் பிரிவில் உதவி ஆணையர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2021-ம் ஆண்டு விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கு ராணுவத்தின் மருத்துவ பிரிவில் பணியாற்றிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்ப்டடார்.

இதே பதவிக்கு ராணுவத்தின் நர்ஸிங் சேவை பிரிவில் பணியாற்றி பெண் ஒருவரும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் கீழ் வரமாட்டார் என காரணம் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவது நிராகரிக்கப்பட்டால், திறமையான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேர முன்வரமாட்டார்கள். அதனால் முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்குவது முக்கியம்.

ராணுவத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 89,000 பேர் உள்ளனர். நாட்டில் மக்கள் தொகையில் பஞ்சாப் மக்கள் 2.3 சதவீதம் என்ற அளவில் இருந்தாலும், ராணுவத்தில் 7.7 சதவீதம் என்ற அளவில் உள்ளனர். இதை அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசின் கொள்கை முடிவு இருக்க வேண்டும். ராணுவத்தின் நர்ஸிங் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண்ணுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x