Published : 19 Apr 2025 07:07 AM
Last Updated : 19 Apr 2025 07:07 AM

இந்திய டேப்லெட் உடையாது: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

ஹரியானாவின் குருகிராமில் உள்ள விவிடிஎன் நிறுவனத்தில் டேப்லெட்டை கீழே போட்டு சோதனை செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட் கீழே விழுந்தாலும் உடையாது என்று மத்திய மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் குருகிராமை தலைமையிடமாக கொண்டு விவிடிஎன் டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மென்பொருள், வன்பொருள், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் கோலோச்சி வருகிறது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், வியட்நாம், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. விவிடிஎன் நிறுவனம் சார்பில் லேப்டாப், டேப்லெட் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் குருகிராமில் உள்ள விவிடிஎன் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சென்றார். அப்போது அந்த நிறுவனத்தின் டேப்லெட்டை அவர் ஆய்வு செய்தார். அந்த லேப்லெட்டை கீழே போட்டார். அது உடையவில்லை. எந்த கீறலும் ஏற்படவில்லை. லேப்லெட் மீது அவர் ஏறி நின்றார். அப்போதும் லேப்லெட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த வீடியோவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் இந்த டேப்லெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதை எளிதில் உடைக்க முடியாது. நீண்ட காலம் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மற்றும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விவிடிஎன் நிறுவனம் உருவாக்கி உள்ள செயற்கை நுண்ணறிவு சர்வரையும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x