Published : 18 Apr 2025 09:38 AM
Last Updated : 18 Apr 2025 09:38 AM
புதுடெல்லி: வக்பு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. வக்பு வாரியங்கள், கவுன்சில்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை மே 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, நாடு முழுவதும் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இந்த மனுக்கள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் - மத்திய அரசு இடையிலான வாதங்களை தொடர்ந்து, இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதிக்க விரும்புவதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார். அப்போது மத்திய அரசின் வாதத்தை முன்வைக்க சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூடுதல் அவகாசம் கோரினார். இதை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:பல்வேறு தரப்பினரின் நிலங்களை வக்பு வாரியங்கள் உரிமை கொண்டாடுகின்றன. நாடு முழுவதும் ஏராளமான கிராமங்களை வக்பு வாரியங்கள் கைப்பற்றியுள்ளன. அப்பாவி மக்கள் நிலங்களை இழந்துள்ளனர். இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய குறைந்தபட்சம் ஒரு வாரம் அவகாசம் தேவை. இந்த ஒரு வாரத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு கூறியதாவது: வக்பு திருத்த சட்டத்தில் பல்வேறு நல்ல விஷயங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சட்டத்துக்கும் தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை. குறிப்பிட்ட சில விதிகளை மட்டுமே மாற்ற வேண்டும் என்று கூறுகிறோம். வழக்கு தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மாநில அரசுகள், வக்பு வாரியங்களும் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யலாம்.
வக்பு வாரியங்கள், கவுன்சில்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள கூடாது. வக்பு வாரிய சொத்துகளில் எந்த மாற்றமும் செய்ய கூடாது. வக்பு சொத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது. இப்போதைய நிலை அப்படியே தொடர வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து இன்றுவரை ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 120 மனுக்களையும் நாங்கள் படித்துக் கொண்டிருக்க முடியாது.
எனவே, 5 பிரதான மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். எனவே, மனுதாரர்கள் ஒருமித்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்த விசாரணை மே 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT