Published : 13 Apr 2025 06:30 AM
Last Updated : 13 Apr 2025 06:30 AM
சாலைகளில் உணவுப் பண்டங்களை தூக்கி எறியாதீர்கள் என்று பொதுமக்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி வாழ் மக்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா, வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதையடுத்து நேற்று கரோல் பாக் நகரில் உள்ள சித் அனுமன் கோயிலுக்குச் சென்று முதல்வர் ரேகா குப்தா வழிபட்டார். இதனைத் தொடர்ந்து அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியதாவது:
அனைத்து டெல்லிவாசிகளுக்கும் நான் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். ரொட்டி அல்லது எந்தவொரு உணவையோ சாலையில் தூக்கி எறியாதீர்கள். விலங்குகளுக்கு அன்புடன் உணவு வழங்குங்கள். ஆனால் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய கலாசாரம் மீது மதிப்பு வைத்திடுங்கள். உங்கள் சாலைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள். நான் டெல்லியில் காரில் பயணிக்கும்போது, பொதுமக்களில் ஒருவர் காரில் இருந்து கொண்டு ரொட்டித் துண்டை எடுத்து சாலையில் வீசியதைப் பார்த்தேன். பசுவுக்கு உணவு கொடுக்கிறோம் என நினைத்துக் கொண்டு அவர் அப்படி செய்துள்ளார். இதனால் காரை நிறுத்தி, அந்நபரிடம் மீண்டும் இப்படி செய்யாதீர்கள் என வேண்டுகோளாக கேட்டு கொண்டேன். இவ்வாறு முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “ரொட்டி நமக்கான உணவு மட்டுமின்றி, நம்முடைய கலாசாரம், நம்பிக்கை மற்றும் மதிப்பு ஆகியவற்றுக்கான ஓர் அடையாளமும் ஆகும். அதனை தூக்கி வீசி அவமதிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT