Published : 11 Apr 2025 09:58 AM
Last Updated : 11 Apr 2025 09:58 AM
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அரை இறுதிப் போட்டியின் கூடுதல் எடை காரணமாக அவர், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்நிலையில், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக அவரை கவுரவிக்க ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்தது. ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகிய 3 வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர், விருப்பத்தின்படி அரசு நடந்துகொள்ளும் என்றும் முதல்வர் நயாப் சிங் நைனி அறிவித்தார்.
ஹரியானா சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின்போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தனக்கு ஹரியானா அரசு வெகுமதி தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதை இதுவரை செய்யவில்லை என்று வினேஷ் போகத் கேள்வி எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பை முதல்வர் நயாப் சிங் நைனி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசு வேலை, வீடு ஆகியவை தனக்கு வேண்டாம் என்றும், ரூ.4 கோடி பரிசை தான் பெற்றுக் கொள்வதாகவும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் விளையாட்டுக் கொள்கை நாட்டிலேயே மிகவும் தாராளமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையை ஹரியானா அரசு வழங்குகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT