Published : 08 Apr 2025 06:26 AM
Last Updated : 08 Apr 2025 06:26 AM
அகமதாபாத்: குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் காந்திநகர் கலோல் பகுதியில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கு விதை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல்லை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டினார். விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
முந்தைய காலத்தில், உரங்களின் விலை அதிகமாகவும் செயல்திறனில் குறைவாகவும் இருந்தன. ஆனால், அதை இஃப்கோ மாற்றியமைத்துள்ளது. குறைந்த விலையில் உரத்தையும், அதிக செயல்திறனையும் இஃப்கோ வழங்குகிறது.
உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இந்த சாதனையில் இஃப்கோவுக்கும் பங்கு உண்டு. விவசாயிகளை உரங்களுடன் இஃப்கோ இணைப்பது மட்டுமல்லாமல், உரங்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் இடையே வலுவான தொடர்புகளையும் உருவாக்கியுள்ளது.
தற்போது அமைக்கப்படவுள்ள விதை ஆராய்ச்சி மையத்தின் மூலம், விதைகளின் தரம் மேம்படுத்தப்படும். வீரிய விதைகள் மூலம் உணவு தானிய உற்பத்தி பெருகும். மேலும் பயிரிடும்போது குறைந்த அளவு தண்ணீர், உரங்கள் மட்டுமே இந்த விதைகளுக்குத் தேவைப்படும். விதை ஆராய்ச்சி மற்றும் தன்னிறைவான விவசாயத்தில் திருப்புமுனையாக இந்த விதை ஆராய்ச்சி மையம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT