Published : 03 Apr 2025 06:20 AM
Last Updated : 03 Apr 2025 06:20 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் தோல்விக்கு வித்திட்ட ஒப்பந்ததாரர் சங்கத்தின் 40 சதவீத கமிஷன் புகார் 100 சதவீதம் பொய்யானது என விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது அம்மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினர். இந்த சூழலில் பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பே சிஎம் 40 சதவீத கமிஷன் என தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்த பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பை பெற்றதால் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் சித்தராமையா, இந்த புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். இந்த ஆணையம் 14 மாதங்கள் விசாரித்த பின்னர், கடந்த மாதம் 12ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில், ‘‘பாஜக அரசின் மீதுகர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்த 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு, 100 சதவீதம் பொய்யானது. அந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஒப்பந்ததாரர்கள் தரப்பில் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் கமிஷன் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்ததாரருக்கு கடன் உள்ளிட்ட வேறு பிரச்சினைகள் இருந்தன''என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘நான் தொடக்கம் முதலே ஒப்பந்ததாரர் சங்கத்தினரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் காரணமாக அமைச்சர்கள் மீது அவதூறை பரப்பி வருவதாக கூறினேன். இப்போது எனது வார்த்தைகள் உண்மையாகியுள்ளது. பொய் குற்றச்சாட்டை கூறி காங்கிரஸார் மக்களை ஏமாற்றிவிட்டனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT