Published : 27 Mar 2025 05:17 AM
Last Updated : 27 Mar 2025 05:17 AM
பெங்களூரு /புதுடெல்லி: கர்நாடகாவில் எம்எல்ஏ.க்களை குறி வைத்து ஹனி டிராப் செய்வதாக எழுந்த புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா பேசுகையில், ‘‘48 எம்எல்ஏ.க்களை அரசியல் ரீதியாக பழி வாங்க பெண்களை வைத்து பாலியல் புகாரில் சிக்க வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். என்னையும் ஹனி டிராப்பில் சிக்க வைக்க சதி செய்தனர்” என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விசாரிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ.க்கள் அஸ்வத் நாராயண், முனி ரத்னா, உள்ளிட்ட 18 பேர் அடுத்த 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் பினய் குமார் சிங், “கர்நாடகாவில் ஹனி டிராப் குறித்து சிபிஐ அல்லது சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விக்ரம் நாத் “கர்நாடகாவில் உள்ள பிரச்சினைகள் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அந்த மாநில அரசு அந்த விவகாரத்தை கையாள போதுமான அதிகாரத்தை கொண்டுள்ளது. எனவே இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT