Published : 11 Mar 2025 11:33 AM
Last Updated : 11 Mar 2025 11:33 AM
புதுடெல்லி: மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்பு ஆடை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்று (மார்ச் 10) பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி தொடங்கியது. அப்போது,தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்வதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்தார். ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ என்று அவர் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, தனது பேச்சை திரும்ப பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சர்ச்சை வார்த்தைகள் நீக்கம்: தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது, ‘‘எங்கள் கவுரவத்தை அமைச்சர் இழிவுபடுத்தி உள்ளார். நாங்கள் அநாகரிகமானவர்கள் என்று விமர்சித்துள்ளார். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸும் வழங்கினார்.
இதையடுத்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘‘தமிழக அரசை, தமிழக எம்.பி.க்களை, தமிழக மக்களை அநாகரிகமானவர்கள் என்று நான் கூறியதாக கனிமொழி குற்றம்சாட்டுகிறார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதன்பிறகும், தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர். அப்போது, திமுக எம்.பி. தயாநிதி மாறன், அவை மாண்பை மீறியதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா குற்றம்சாட்டினார். திமுக எம்.பி.க்களின் தொடர் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
கருப்பு ஆடை, கண்டன வாக்கியம்.. இந்நிலையில், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று (மார்ச் 11) கருப்பு ஆடை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என்பதை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி உள்ளிட்டோர், மதிமுக எம்.பி. வைகோ, விசிக எம்.பி. திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT