Published : 03 Mar 2025 05:08 AM
Last Updated : 03 Mar 2025 05:08 AM
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹர்பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் மூலம் போலி வாக்காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் மே.வங்கத்தில் உள்ளதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில்கூறியிருப்பதாவது: இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண்கள், 2 பேருக்கு ஒன்று போல் இருக்கலாம். ஆனால், அவரவர் மாநிலங்களில் உள்ள தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில்மட்டும்தான் வாக்களிக்க முடியும். 2 பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், அவர்களை போலி வாக்காளர்கள் என்றோ அல்லது நகல் (டூப்ளிகேட்) வாக்காளர்கள் என்றோ கருதுவதற்கில்லை.
அவர்களால் 2 இடங்களில் வாக்களிக்கவும் முடியாது. எனினும், இதுபோல் 2 பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் வருவதை தவிர்க்க ‘எரோநெட்’ தளத்தில் மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT