Published : 02 Mar 2025 04:54 AM
Last Updated : 02 Mar 2025 04:54 AM
பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் 25-வது ஆண்டு தினம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்தது. அப்போது நேரு மற்றும் ஜின்னாவின் தனிப்பட்ட விருப்பங்கள் காரணமாகbs இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உதயமாகின. முன்னாள் பிரதமர் நேரு தன்னை அமைதியின் தூதர் என்று கருதினார். ஆனால் அவரது பல்வேறு தவறுகளின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
பிரிவினையின்போது இந்திய ராணுவம் மிர்பூரை (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) சென்றடைந்தது. அப்போது ராணுவத்தின் தரப்பில் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் கோரப்பட்டது. ஆனால் திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. இந்த பிரச்சினையை அப்போதைய பிரதமர் நேரு ஐ.நா. சபைக்கு கொண்டு சென்றார். இது மிகப்பெரிய தவறு. இதன்காரணமாகவே இன்று வரை ஆக்கிரமிப்பு காஷ்மீரை உரிமை கோர முடியாமல் இருக்கிறது.
காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம். எனவே ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போது இந்தியாவுடன் இணைக்கப்படும் என்பதை என்னால் அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இந்தியாவுடன் இணைக்க முடியும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.
370-வது சட்டப்பிரிவை நீக்க முடியாது என்று பலரும் கூறிவந்தனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இனிமேல் யாராலும் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது. இதேபோல ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த லட்சியத்தை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசியதாவது: காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க எந்த எல்லைக்கும் செல்ல மத்திய அரசு தயாராக இருக்கிறது. தற்போது பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். அங்கு கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அந்தப் பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயமாக இந்தியாவுடன் இணையும். இவ்வாறு துஷார் மேத்தா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT