Published : 28 Feb 2025 06:53 PM
Last Updated : 28 Feb 2025 06:53 PM
புதுடெல்லி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால், அத்தகையோர் மீது டெல்லி போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது என்பது தேசிய பாதுகாப்புக்கு எதிரானது. ஊடுருவல்காரர்கள் நாட்டிற்குள் நுழையவும், அவர்கள் ஆவணங்களை உருவாக்கவும், அவர்கள் இங்கு தங்குவதற்கு வசதி செய்யவும் உதவும் முழு வலையமைப்பின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் பிரச்சினை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. எனவே, அது கடுமையாகக் கையாளப்பட வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும். நகரில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான கும்பல்களை இரக்கமின்றி ஒழிப்பது டெல்லி காவல்துறையின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் தொடர்ந்து மோசமாக செயல்படும் காவல் நிலையங்கள் மற்றும் துணைப் பிரிவுகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் வழக்குகளில் "மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் அணுகுமுறை" மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் வலையமைப்புகள் அகற்றப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT