Published : 23 Feb 2025 05:09 AM
Last Updated : 23 Feb 2025 05:09 AM
குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக, 2 மணி நேரம் இடைவேளை விடும் நடைமுறை இருந்து வந்தது. இந்த முறை முதல்வர் சையது சாதுல்லா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த 1937-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சுமார் 90 ஆண்டுகளாக தொடரும் இந்த நடைமுறையை ரத்து செய்வது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சபாநாயகர் தலைமையிலான சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமையிலும் மற்ற நாட்களைப் போலவே பேரவை செயல்பட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பிஸ்வஜித் டெய்மரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அசாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத் தொடர் முதல் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்றுள்ளார். அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஏஐயுடிஎப் எம்எல்ஏ ரிபிகுல் இஸ்லாம் கூறும்போது, “சட்டப்பேரவையில் 30 முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை இடைவேளையை ரத்து செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அவர்கள் (பாஜக) ஒருதலைப்பட்சமாக இந்த முடிவை அமல்படுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT