Published : 10 Feb 2025 08:05 AM
Last Updated : 10 Feb 2025 08:05 AM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மிக்கான நேரடி மோதலில், காங்கிரஸ் கட்சி போட்டியிலேயே இல்லாத நிலை இருந்தது. 3-வது முறையாக இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.
இருப்பினும், இந்த தேர்தலில் 6.34 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம். பாஜக 45.56 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 43.57 சதவீத வாக்குகளை பெற்றன. இவற்றுக்கிடையேயான வித்தியாசம் வெறும் 1.99 சதவிகிதம் மட்டுமே. இதன்மூலம், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு தடையாக இருந்தது தெளிவாகிறது. இதை தனது தோல்வியிலும் வெற்றியாகவே காங்கிரஸ் கருதுகிறது.
ஏனெனில், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக ஆட்சி அமைத்து தனி ஆவர்த்தனம் நடத்தி வந்தது. இதன்பிறகு 1970-ம் ஆண்டுகளில் உருவான ஜனதா கட்சியால் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு முதல்முறையாக நெருக்கடி ஏற்படத் துவங்கியது.
இந்த ஜனதாவின் முக்கிய கட்சியாக இருந்த பாஜக தற்போது தேசிய அளவில் காங்கிரஸை மிஞ்சும் கட்சியாக வளர்ந்து நிற்கிறது. இதனால், பாஜகவின் எதிர்க்கட்சியாக தம்மை முன்னிறுத்துவதே காங்கிரஸுக்கு பெரும் சவாலாகி விட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மிகட்சியால், பஞ்சாபில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். கோவா, குஜராத், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மியால் காங்கிரஸுக்கு சில இழப்புகள் ஏற்பட்டன. ஆம் ஆத்மியால், காங்கிரஸுக்கு டெல்லியில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாஜகவை விட ஆம் ஆத்மியை தன் முதல் எதிரியாகக் காங்கிரஸ் கருத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘பாஜகவிற்கு எதிராக, சேரவே முடியாத பரம விரோதக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ‘இண்டியா’ எனும் பெயரில் கூட்டணியை உருவாக்கின. இதில் காங்கிரஸுக்கு எதிராக கேஜ்ரிவால்தான் முதல் தலைவராக எதிர்ப்பு குரல் கொடுத்தார். இவரை தொடர்ந்து மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உபியின் சமாஜ்வாதி எனப் பலரும் கிளம்பிவிட்டனர்.
இந்த நிலை தொடர்ந்தால் மக்களவையில் காங்கிரஸுக்கு கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தும் அடுத்தமுறை சரிந்து விடும். எனவே, பாஜகவை விட ஆம் ஆத்மியை தீவிரமாக எதிர்க்க வேண்டி வந்தது. ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் டெல்லி முடிவுகள் மாறும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், பாஜகவை விட, ஆம் ஆத்மியை முதலில் ஒழிப்பது காங்கிரஸின் எதிர்காலத்துக்கு அவசியம். டெல்லி தோல்வியால் காங்கிரஸ் துவளவில்லையே தவிர ஆம் ஆத்மியின் சரிவால் எங்களுக்கு வெற்றி என்றே கருதுகிறோம்” எனத் தெரிவித்தன.
ஆம் ஆத்மிக்கு அதிகமான இழப்பு டெல்லியின் மூன்று தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. புதுடெல்லியில் கேஜ்ரிவால், ஜங்புராவில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் கிரேட்டர் கைலாஷில் மாநில அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் ஆகியோர் காங்கிரஸால் தோல்வியை சந்தித்தனர். இந்த மூன்றின் வெற்றி வித்தியாசத்தை விட, காங்கிரஸ் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. கால்காஜியில் முதல்வர் ஆதிஷி 3,521 வாக்குகளில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான ரமேஷ் பிதூரியை வென்றுள்ளார். இங்கு காங்கிரஸின் அல்கா லம்பாவுக்கு கிடைத்த 4,342 வாக்குகளை விட சிறிது கூடுதலாகப் பெற்றிருந்தால் ஆதிஷியும் தோல்வி பெற்றிருப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT