Published : 08 Feb 2025 03:04 PM
Last Updated : 08 Feb 2025 03:04 PM

உ.பி.யின் மில்கிபூர் இடைத்தேர்தல்: நீயா நானா போட்டியில் பாஜக வெற்றி முகம்!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் மில்கிபூர் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு இடையே நடந்த நீயா நானா போட்டியில், பாஜக வெற்றியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. 9 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் சந்திரபான் பஸ்வான் 47,176 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் அஜித் பிரசாத் 25,000 வாக்குகள் பின்தங்கி இருந்தார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் அயோத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் மில்கிபூர் தொகுதியின் நடந்த இடைத்தேர்தல் சமாஜ்வாதி கட்சிக்கும், ஆளும் பாஜகவுக்கும் இடையில் கவுரவப் பிரச்சினையாக பார்க்கப்பட்டது. மில்கிபூர் தொகுதியை சமாஜ்வாதி கட்சியிடமிருந்து பாஜக கைப்பற்ற இருக்கும் இந்த நிலையில், அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் சந்திரபான் பஸ்வான், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "பிரதமர் மோடிக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாக்காளர்களின் ஆதரவுக்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகப் பெரிய அளவிலான ஆதரவும் மரியாதையும் எனக்கு கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

9 சுற்றுகளுக்கு பின்பு பாஜக வேட்பாளரின் 25,000 வாக்குகள் வித்தியாச முன்னிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஒ.பி.ராஜ்பார், "என்டிஏ வேட்பாளர் அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். அவர்கள் யோகி ஆதித்யநாத்தின் பணிகளில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது ராமர் கோயில் திறக்கப்பட்ட அயோத்தியில் உள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக கட்சி தோல்வியடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அதே அயோத்தியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியான மில்கிபூர் இடைத்தேர்தலை பாஜக கவுரவப் பிரச்சினையாக பார்த்தது.

தனித்தொகுதியான மில்கிபூர் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவதேஷ் பிரசாத், மக்களவைத் தேர்தலில் ஃபைசாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மில்கிபூர் தொகுதி காலியானது. இந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அவதேஷின் மகன் அஜித் பிரசாத்தை களமிறக்கியது. பாஜக சந்திரபான் பஸ்வானை நிறுத்தியது.

கடந்த 2022-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் பாபா கோரக்நாத் தாக்கல் செய்த ஒரு ரிட் மனு காரணமாக மில்கிபூரின் இடைத்தேர்தல் தாமதமாகியது. தனது மனுவில், பிரசாத்தின் வெற்றியை சவால் செய்திருந்த கோரக்நாத், அவரின் வேட்புமனு ஆவணங்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தார். பின்பு கோரக்நாத் தனது மனுவினை திரும்ப பெற்ற நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் பிப்.5-ம் தேதி மில்கிபூரிக்கு இடைத்தேர்தல் அறிவித்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x