Published : 08 Feb 2025 02:30 PM
Last Updated : 08 Feb 2025 02:30 PM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்துள்ள நிலையில், மதுபான ஊழலால் அரவிந்த் கேஜ்ரிவாலின் இமேஜ் சிதைந்ததே இதற்குக் காரணம் என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் அக்கட்சி 5 தொகுதிகளில் வெற்றி, 17 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் வாய்ப்புடன் உள்ளது. டெல்லியில் ஆட்சியை பாஜக கைப்பற்ற உள்ளது. அக்கட்சி 5 தொகுதிகளில் வெற்றி, 43 தொகுதிகளில் முன்னிலை என 48 தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலரும், அரவிந்த் கேஜ்ரிவாலின் முன்னாள் வழிகாட்டியுமான அன்னா ஹசாரே, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் நல்ல குணம், சிறந்த யோசனைகள் இருக்க வேண்டும். தூய்மையான நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும். இதை நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். ஆனால், அவர்களுக்கு (ஆம் ஆத்மி) அது புரியவில்லை. அவர்கள் மதுபான ஊழலில் சிக்கிக்கொண்டனர். இதனால் அவரது (அரவிந்த் கெஜ்ரிவால்) பிம்பம் சிதைந்தது. அதனால்தான் தேர்தலில் அவர்களுக்கு வாக்குகள் குறைவாகவே கிடைக்கின்றன.
நற்குணங்களின் முக்கியத்துவம் குறித்து அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) பேசுவதையும், மதுபான ஊழல் குற்றச்சாட்டில் அவர் சிக்கியதையும் மக்கள் பார்த்தார்கள். அரசியலில், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஒருவர் தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்கும். ஒரு கூட்டம் நடந்தபோது, நான் கட்சியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என்று முடிவு செய்தேன் - அன்று நான் விலகி இருந்தேன்," என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT