Published : 07 Feb 2025 04:22 PM
Last Updated : 07 Feb 2025 04:22 PM

“டெல்லி தேர்தல் தோல்வியை மறைக்க ராகுல் முயற்சி” - மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலடி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை மறைக்க, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான கருத்துருவாக்கத்தை உருவாக்கும் நோக்கிலேயே மகாராஷ்டிர தேர்தல் குறித்து ராகுல் காந்தி தற்போது கேள்வி எழுப்புவதாக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சந்தேகத்தை எழுப்புவதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாத காலத்தில் புதிதாக 39 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்தல் ஆணையம் அனைத்து கேள்விகளுக்கும் திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனது கட்சி டெல்லியில் எங்கும் இருக்காது என்பதை அறிந்த ராகுல் காந்தி ஒரு மறைமுகத் தாக்குதலை செய்கிறார்.

அன்று என்ன பேசலாம், எப்படி ஒரு புதிய கதையை உருவாக்கலாம் என்பதற்காக அவர் பயிற்சி செய்கிறார். ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்யாமல், பொய்களால் தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டால் - அவரது கட்சியின் மறுமலர்ச்சி சாத்தியமில்லை. ராகுல் காந்தி தனது தோல்வியை சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஒரே நகைச்சுவையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, ​​நீங்கள் அதைப் பார்த்து சிரிக்க மாட்டீர்களா" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் பதிவில், "அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய பங்குதாரர்களாகக் கருதுகிறது. நிச்சயமாக வாக்காளர்கள் முதன்மையானவர்கள் என்றபோதிலும், அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் கருத்துக்கள், பரிந்துரைகள், கேள்விகளை தேர்தல் ஆணையம் ஆழமாக மதிக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையான தரவுகளுடன் ஆணையம் எழுத்துபூர்வமாக பதிலளிக்கும்." என்று தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் கருத்து: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே ) எம்பி சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டுக் கட்சி - சரத் பவார் பிரிவு எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தேர்தல் ஆணையத்திடம் உள்ள மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலை காங்கிரஸ், சிவசேனா-யுபிடி, என்சிபி-எஸ்எஸ் ஆகிய கட்சிகள் கோருகின்றன.

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி வருகிறோம். மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றின்போது பயன்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்கள் எங்களுக்குத் தேவை.

ஏனெனில், மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்கள் கழித்து அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்குள், 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும்/ வாக்காளர் பட்டியலைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது.

அரசியலமைப்பை முற்றிலுமாக அழிக்கும் பாதையை நோக்கி செல்வதைப் பார்க்கிறோம். எனவே, அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பணி முக்கியம். வாக்காளர் பட்டியலை எங்களுக்கு வழங்க தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ தவறு இருக்கிறது, அது அவர்களுக்குத் தெரியும் என்பதே அதற்கு ஒரே காரணம்.

தேர்தல் ஆணையத்துக்கு உயிர் இருந்தால், அது ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அடிமை என்று பொருள் கொள்ளப்படும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x