Published : 02 Feb 2025 07:18 AM
Last Updated : 02 Feb 2025 07:18 AM

ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்

சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும் பட்ஜெட்டாக 2025-26-மம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கிய மைல்கல். 140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட் இது. இளைஞர்களுக்காக பல துறைகளைத் திறந்துள்ளோம்.

வரும் நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டானது ஒரு சக்தியைப் பெருக்கும். இந்த பட்ஜெட் சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும்.

இந்த மக்கள் பட்ஜெட்டுக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினரையும் வாழ்த்துகிறேன்.

பொதுவாக பட்ஜெட்டில் அரசின் கருவூலம் எப்படி நிரப்பப்படும் என்பதில்தான் கவனம் செலுத்தப்படும். ஆனால் இந்த பட்ஜெட் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது.

இந்த பட்ஜெட், நாட்டின் குடிமக்களின் சட்டைப் பைகளை எப்படி நிரப்பும், நாட்டு குடிமக்களின் சேமிப்பை எப்படி அதிகரிக்கும், நாட்டின் குடிமக்கள் எப்படி வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறுவார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த பட்ஜெட் இதற்கு மிகவும் வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட்டில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அணுசக்தி துறையில் தனியார் துறையை ஊக்குவிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இது நாட்டின் வளர்ச்சியில் சிவில் அணுசக்தியின் பெரும் பங்களிப்பை உறுதிசெய்யும்.

பட்ஜெட்டில், அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புக்கு ஒவ்வொரு வகையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க விரும்புகிறேன்.

உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால் இந்தியாவில் பெரிய கப்பல்களின் கட்டுமானம் ஊக்குவிக்கப்படும். கப்பல் கட்டுமானம் அதிகபட்ச வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அதேபோல், நாட்டில் சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 50 முக்கிய சுற்றுலா நிலையங்களில் ஓட்டல்கள் கட்டப்படும். முதல் முறையாக, உள்கட்டமைப்பு வரம்புக்குள் ஓட்டல்களை கொண்டு வருவதன் மூலம் சுற்றுலாவுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும்.

இது மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையான விருந்தோம்பல் துறைக்கு ஆற்றலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயத் துறையிலும், ஒட்டுமொத்த ஊரகப்பகுதி பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடித்தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். கிசான் கிரெடிட் கார்டு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது விவவசாயிகளுக்கு மேலும் உதவும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x