Published : 14 Oct 2025 05:56 AM
Last Updated : 14 Oct 2025 05:56 AM
சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலையான மின் உற்பத்தியை உறுதி செய்யவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
அனைத்து மாநிலங்களும் சூரியசக்தி மின் நிலையங்கள், காற்றலைகள், நீர்மின் நிலையங்களை அமைத்து, மாநிலத்தின் பசுமை மின்சார உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றன. இந்த மின்நிலையங்களை மாநிலங்களின் மின்வாரியங்களும், தனியார் நிறுவனங்களும் அமைத்து வருகின்றன.
இந்நிலையில், மாநிலம் வாரியாக பசுமை மின்சார உற்பத்தி திறன் விவரங்களை, மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு ஜன.31-ம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் ராஜஸ்தான் முதலிடம், குஜராத் 2-வது இடம், தமிழகம் 3-வது இடம், கர்நாடகா 4-வது, மஹாராஷ்டிரா 5-வது இடத்திலும் இருந்தன.
தற்போது செப்டம்பர் நிலவரப்படி மின்நிறுவு திறன் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், முதல் இரண்டு இடங்களில் இருந்த ராஜஸ்தான், குஜராத் எந்த மாற்றமுமின்றி தொடரும் நிலையில், 3-வது இடத்தில் இருந்த தமிழகம் 4-வது இடத்துக்கும், கர்நாடகா 5-வது இடத்துக்கும் சென்றது. 5-வது இடத்தில் இருந்த மஹாராஷ்டிரா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தாண்டு ஜனவரி நிலவரப்படி, தமிழகத்தின் திறன் 24,333 மெகாவாட் ஆகவும், மஹாராஷ்டிராவின் திறன் 20,982 மெகாவாட் ஆகவும் இருந்தது. செப்டம்பர் நிலவரப்படி, மஹாராஷ்டிரா 27,674 மெகாவாட், தமிழகம் 26,588 மெகாவாட், கர்நாடகா 25,499 மெகாவாட் திறனிலும் உள்ளன. மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT