Published : 25 Sep 2025 02:07 PM
Last Updated : 25 Sep 2025 02:07 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு பற்றிய காட்டுத்தீ 2-வது நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அடர்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் நீரோடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அழகர்கோவில் பீட்டுக்கு உட்பட்ட மலைச்சரிவில் நேற்று முன்தினம் மாலை காட்டுத்தீ பற்றியது. இரவில் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியது. நேற்று 2-வது நாளாக தீ எரிந்து வருகிறது. ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் உத்தரவில் வனச்சரகர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடர்ந்த மரங்கள் மற்றும் வன விலங்குகள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ எரிவதால் விலங்குகள் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT