Published : 02 Sep 2025 05:53 AM
Last Updated : 02 Sep 2025 05:53 AM
சென்னை: சென்னையில் விநாயகர் சிலை கரைப்பால் கடற்கரைகளில் 2 நாட்களாக கரை ஒதுங்கிய 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மாநகரில் 1800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிலைகளை கரைக்க சென்னையில் பட்டினப்பாக்கம் - சீனிவாசபுரம், காசி மேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் யுனிவர்சல் கார்போரண்டம் தொழிற்சாலைக்கு பின்புறம், நீலாங்கரை- பல்கலைநகர், எண்ணூர்- ராமகிருஷ்ணா நகர் ஆகிய 6 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஏற்றி வரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் தூக்கிச் சென்று கடலில் பாதுகாப்பாக கரைக்கப்பட்டன. அவ்வாறு கடலில் கரைக்கப்பட்ட சிலைகளிலிருந்து மரக்கட்டைகள் உள்ளிட்டவை 2 நாட்களாக கரை ஒதுங்கி வருகின்றன.
இவற்றை அகற்றும் பணியில் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக மொத்தம் 140 டன்கழிவுகளை அகற்றியுள்ளனர். அதிகபட்சமாக மெரினா லூப் சாலையில் 49 டன், சீனிவாசபுரம் பகுதியில் 43 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT