Published : 22 Aug 2025 03:39 PM
Last Updated : 22 Aug 2025 03:39 PM
கூடலூர்: கூடலூர் மூன்றாம் மைல் பகுதியில் வனத்துறையினரை துரத்தி, கடையை மக்னா யானை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மூன்றாம் மைல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் காட்டு யானை உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அவ்வப்போது ஊருக்குள் புகும் காட்டு யானையை வனத்துறையினர் குழுக்களாக இணைந்து விரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இப்பகுதியில் மக்னா யானை உலா வந்தது. இதையறிந்த மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். காட்டு யானை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்ததும், ஜீப்பில் சைரன் ஒலி எழுப்பியவாறு வனத்துறையினர் வந்தனர்.
ஜீப்பில் இருந்து இறங்கி யானையை விரட்ட ஒலிப்பெருக்கி மூலம் வனத்துறையினர் கூச்சலிட்டனர். ஆவேசமடைந்த மக்னா யானை, வனத்துறையினரை துரத்தியது. யானையிடம் இருந்து வனத்துறையினர் தப்பியோடினர். அங்கிருந்த கடையை காட்டு யானை துதிக்கையால் ஆக்ரோஷமாக தாக்கி சேதப்படுத்தியது.
பலமணி நேர போராட்டத்துக்குப்பிறகு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இக்காட்சிகள் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
மக்னா உட்பட காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவதால் தூக்கம் தொலைத்து தவிப்பதாகவும், காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாதவாறு நிரந்தர தீர்வை வனத்துறையினர் ஏற்படுத்த வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூடலூர் மூன்றாம் மைல் பகுதியில் உள்ள கடையை ஆக்ரோஷமாக சேதப்படுத்திய மக்னா யானை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT