Published : 11 Jun 2025 07:59 PM
Last Updated : 11 Jun 2025 07:59 PM
கோவை: கோவை அருகே மின்வேலியை சிரமமப்பட்டு கடந்து சென்ற யானைகள் கூட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் வெளியேறி அருகிலுள்ள கிராமங்களில் நுழைவதும், வனத்துறையினர் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இரவு வெள்ளியங்கிரி அருகே உள்ள முள்ளங்காடு பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு பெண் யானைகள் இன்று (ஜூன் 11) காலை வனப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்றன. முள்ளங்காடு பகுதி அருகே இருந்த மின்வேலியை கடக்க முடியாமல் யானைகள் சிரமமப்பட்டன.
சிறிது நேரத்துக்குப் பின் பெண் யானை வேலிக்கு அடியில் புகுந்து வெளியேற, குட்டி யானையும் அவ்வாறே வெளியேறியது. மற்றொரு யானை, மின் வேலியின் கம்பியைத் தாண்டியபடி வெளியேறியது. இதை அப்பகுதியில் இருந்த மக்கள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்து பகிர்ந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதேபோல் இன்று மாலை உணவு தேடி சாடிவயல் பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை நுழைந்து சாடிவயல் சோதனை சாவடி பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களை துரத்தியது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT