Published : 11 Jun 2025 07:24 PM
Last Updated : 11 Jun 2025 07:24 PM
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை சீர்படுத்தி, நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்காக, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி), எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (டெரி), இ.ஆர். எம். இந்தியா பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ராட்ஸ் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டிருந்தது. இதில், நீரி நிறுவனம் ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளதாக கூறி மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான பணிகளை எந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், மும்பை ஐஐடி நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவை இரண்டு வாரங்களில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மூன்று நிறுவனங்களும் தங்கள் அறிக்கைகளை இந்த குழுவுக்கு அளிக்க வேண்டும். இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, இந்த குழு, ஸ்டெர்லைட் ஆலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT