Published : 05 Jun 2025 07:49 AM
Last Updated : 05 Jun 2025 07:49 AM
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) அனுசரிக்கப்படுவதை ஒட்டி, ‘சுற்றுப்புற சூழலில் அக்கறை கொள்வதில் இருந்து எது நம்மை தடுக்கிறது?’ என்ற தலைப்பில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்ட செய்தி இது...
“அனைத்து வளர்ச்சியின் நோக்கமும் வாழ்வை ஆதரிக்கவும் தக்க வைத்துக் கொள்ளவுமாக தான் இருக்க வேண்டும். வளர்ச்சி என்பது கட்டாயம் தான், ஆனால் ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு அதை அணுகும்போது அது பேரழிவு ஆகிறது. உயிர்களை அதன் அனைத்து வடிவங்களிலும் மதிக்காத வளர்ச்சி வளர்ச்சியாகவே இருக்க முடியாது. வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் இயற்கையை பற்றிய அக்கறையும் கருணையும் இருந்தால் மட்டுமே அது அனைத்தையும் உள்ளடக்கிய முழு வடிவமாகத் திகழும்.
வரலாற்று ரீதியாகவே, இயற்கையை போற்றுவதென்பது நம் பண்டைய கலாச்சாரங்களில் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. நம்மில் இருந்து இயற்கை எப்பொழுதுமே பிரித்து பார்க்கப்படவில்லை. ஆறுகள், மலைகள் மரங்கள், காற்று, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை நம்மோடு தொடர்புடையவை எனும் ஆழமான எண்ணத்தால் போற்றப்பட்டிருக்கின்றன. எப்போது பயபக்தி தொலைந்ததோ அப்போது சுரண்டல் ஆரம்பமாகி விட்டது.
யதார்த்தத்தில், மனிதனுடைய பேராசையே இந்த பூமிக்கு மிக பெரும் தீங்கிழைக்கிறது. பேராசையானது சுற்றுச்சூழலை பற்றிய உணர்வற்ற தன்மையையே மனிதனுக்கு வழங்கியிருக்கிறது. எப்போது ஒருவர் பேராசையின் தாக்கத்தால், குறுகிய கால ஆதாயங்கள் பெறுகிறாரோ, அப்போது உயிரினங்களின் வாழ்க்கை சூழலை பாதுகாப்பது என்பது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. எந்த மனது பேராசையால் ஆட்கொள்ளப்பட்டதோ, அது அதன் வாழ்வோடும் பூமியோடும் உள்ள தொடர்பை இழக்கிறது.
பேராசை, உணர்வின்மை, அதிகப்படியான நுகர்வுத் தன்மை போன்றவையே எங்கும் பரந்திருக்கும் சுற்றுசூழல் சீரழிவுக்கான வேர்களாகும். இந்த நிலையில் இருந்து வெளிவர நம்மை நம்முள் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் மற்றும் வன்முறை நிரம்பியுள்ள சமுதாயத்தில் நிலையான வளர்ச்சி என்பது இருக்காது. மன அழுத்தம், பதற்றம், பாரபட்சம் நிரம்பியிருக்கும் ஒரு மனது சுற்றுச்சூழலை கண்டிப்பாக கவனிக்க முடியாது. ஆனால், அமைதியும் திருப்தியும் நிறைந்திருக்கும் இதயம் இயல்பாகாவே தன்னை சுற்றியுள்ளவற்றில் அக்கறை கொள்ளும். உள்ளார்ந்த அமைதி என்பது விலகுதல் அல்ல. அது நம்மை சுற்றியுள்ள உயிர்களின் மீது ஆழமான அர்த்தமுள்ள ஈடுபாட்டை கொண்டுவரும் விழிப்புணர்வு.
இன்றே நாம் இந்த பயபக்தியை மீண்டும் எழுச்சி அடைய செய்ய வேண்டும். நீங்கள் ஆறுகளை புனிதமாக பார்க்கும்போது அதை மாசுபடுத்த இயலாது. நீங்கள் மரத்தை புனிதமாக பார்த்தால் அதை அழிக்க மனம் வராது. புனிதமாக நினைக்கும் பொருளை உங்களால் அழிக்க முடியாது. உங்களுக்கு ஒன்று புனிதமாக இருந்தால், அதை நீங்கள் விழிப்புணர்வு மற்றும் கருணையோடும் உங்களோடு சேர்த்தணைத்து கொள்வீர்கள்.
இந்த விழிப்புணர்வு இல்லாமையே, வளர்ச்சிக்கான குறுகிய கண்ணோட்டத்தோடு கூடிய பரவலான காடழிப்புக்கு வழியாகி விட்டது. மரங்கள் சுற்றுச்சூழலில் ஓர் அங்கம் மட்டுமல்ல. அவை நமது நீட்டிக்கப்பட்ட நுரையீரலாகும். அவற்றை தொந்தரவு செய்வது, நம்மை நாமே மூச்சடைக்க செய்வது போல தான். அதனால்தான் நாங்கள் அனைவரையும் தங்கள் இருக்கும் இடத்தில் மரங்கள் நட ஊக்குவிக்கிறோம். நமது தன்னார்வலர்கள் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களை ஏற்கெனவே நட்டிருக்கிறார்கள். எங்கு ஒரு மரம் வெட்டப்பட்டாலும் அதற்கு பதிலாக ஐந்து மரங்களை நாம் நட வேண்டும்.
சகவாழ்வின் நிலைத்தன்மையை பற்றி அறிந்து கொள்ள இயற்கையிடம் நிறைய இருக்கிறது. ஒரு காட்டில், கழிவுகளே இருக்காது, ஒவ்வொன்றும் முறுசுழற்சி, மறுபயன்பாடு, மறுபிறவி எடுத்துக்கொள்ளும். இவை ஏன், வேட்டையாடுபவர் மற்றும் இரைகளுக்கு நடுவே கூட ஒரு சமநிலை இருக்கிறது. ஒரு மண்புழுவை பாருங்கள், இயற்கை கழிவுகளை எவ்வாறு ஜீரணித்து, நம்முடைய வாழ்விற்கு உதவியாக மறுசுழற்சி செய்து தருகிறது என்பதற்கு மண்புழுதான் சரியான உதாரணம்.
அதே போல, நாம் ஒரு நாகரிக சமுதாயமாக எவ்வாறு கழிவுகளை மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு, நாம் நம் வேர்களுக்கு திரும்ப செல்ல வேண்டும். இன்று இயற்கை விவசாயம் என நாம் கூறிக் கொண்டிருக்கும் பண்டைய வேத கால வேளாண்மை தொழில்நுட்பங்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது அத்தனை கழிவுகளையும் மறுஉபயோகம் செய்து வயல்களுக்கான உரமாகவும், விவசாயத்தின் மற்றைய உபயோகத்திற்காகவும் மாற்றியமைத்து கொள்கிறது.
உதாரணமாக, தழை உரம், இதில் வைக்கோலை எரிப்பதற்கு பதிலாக அதை உரமாக மறுசுழற்சி செய்வார்கள். இது விவசாயியின் பணத்தை சேமிக்கவும், தரமான விளைச்சலுக்கு சுற்றுப்புற சூழலுக்கும் உபயோகமாக இருக்கிறது. நமது வாழ்க்கை 80-90 வருடங்கள்தான். நாம் வாழும் காலத்தில் இந்த பூமியை நாம் எந்த அளவிற்கு சுயநலத்துக்காக பயன்படுத்துகிறோம், மேலும் எந்த அளவுக்கு அதை பாதுகாக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். இந்த பூமியை உபயோகித்து விட்டு வீணடிக்க போகிறோமா அல்லது இதை பாதுகாத்து வைக்க பங்களிக்க போகிறோமா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT